இடைத் தேர்தலோ.. பொதுத் தேர்தலோ.. மொத்த இந்தியாவிலும் மோசமாக தோற்றது காங்கிரஸ்தான்! காரணம் இதுதான்
சென்னை: 11 மாநிலங்களில் நடைபெற்ற 58 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலாக இருக்கட்டும், பீகார் சட்டசபை தேர்தலாக இருக்கட்டும், இந்த தேர்தலில் மிகப்பெரிய இழப்பை சந்தித்தது காங்கிரஸ் கட்சிதான்.
கம்யூனிஸ்ட் கட்சிகளை விடவும் மோசமாக பங்களிப்பைச் செய்துள்ளது காங்கிரஸ் என்றால் நம்பமுடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.
உதாரணத்துக்கு.. பீகார் சட்டசபை தேர்தலை எடுத்துக்கொள்வோம். அடித்து பிடித்து 70 சீட்டுகளை கூட்டணி கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்திலிருந்து வாங்கிக்கொண்டது காங்கிரஸ்.
ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.. பீகார் வெற்றிக்கு மோடிக்கு வாழ்த்து சொன்ன ஓபிஎஸ்
அளவு இல்லாத தோல்வி
தேர்தல் முடிவுகளின் போது நடந்தது என்ன? போட்டியிட்டதில் 1 அல்லது 2 கிடையாது. 51 தொகுதிகளில் தோற்று.. முகத்தைத் தொங்கப் போட்டு உட்கார்ந்து கொண்டு இருக்கிறது, இந்தியாவை அதிக காலம் ஆட்சி செய்த கட்சி என்ற பெருமை கொண்ட காங்கிரஸ். ராஷ்ட்ரிய ஜனதாதள கூட்டணி ஆட்சியை பிடிக்க விடாமல் செய்ததில் மிக முக்கிய பங்கு காங்கிரசுக்குதான் இருக்கிறது. குறைந்தது 30 தொகுதிகளில்.. அதாவது பாதிக்கும் சற்று குறைவான தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தால் கூட பீகாரில் இப்போது தேஜஸ்வி யாதவ் முதல்வராக அரியணை ஏறி இருப்பார். ஆனால் 51 தொகுதிகளை வீணாக்கி சொந்த கூட்டணியின் வெற்றி கனவை குண்டு வைத்துத் தகர்ப்பது போல தகர்த்து விட்டது காங்கிரஸ்.
பிரச்சாரத்திற்கு கட் அடித்த ராகுல்
உட்கார்ந்த இடத்திலேயே வெற்றி தங்களைத் தேடி வரும் என்ற ஓவர் மெத்தன எண்ணம் அந்த கட்சி தலைவர்களுக்கு தொடர்கிறது என்பதை பீகார் நடவடிக்கையும் அம்பலப்படுத்தி உள்ளது. ஏனெனில், ராகுல் காந்தியுடன் ஒப்பிட்டால் மிகவும் பிஸியாக இருக்க கூடியவர் பிரதமர் நரேந்திர மோடி. வயதும் அதிகம். ஆனால், பீகாரில் அவர் பங்கேற்ற பிரசார கூட்டங்களை விட, ராகுல்காந்தி பங்கேற்ற பிரசார கூட்டங்கள் குறைவானது என்று சொன்னால் தவறு யார்மீது இருக்கிறது என்பதை நீங்களே புரிந்துகொள்ளலாம்.
கூட்டணி கட்சிகள் வேதனை
ராகுல் காந்தி தான் இப்படி என்றால்.. புதிதாக வளர்த்து எடுக்கப்பட்டு வரும் தலைவரான பிரியங்கா காந்தியும், பீகார் பிரச்சாரத்தில் பெரிய ஆர்வம் காட்டவில்லை. இது பற்றி சிபிஐஎம்எல் கட்சியின் பொது செயலாளர் பட்டாச்சாரியா கூறுகையில், கூட்டணி கட்சிகளிடம் இருந்து கூடுதல் வெற்றி விழுக்காட்டை நாங்கள் எதிர்பார்த்தோம். ஐக்கிய ஜனதா தளம் பெரும்பாலான இடங்களில் தோல்வியை தழுவும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் காங்கிரஸின் தோல்வி ஆளும் கட்சிக்கு பலமாக போய்விட்டது என்று தெரிவித்துள்ளார்.
பிரியங்கா காந்தி செல்வாக்கு
பீகார் மட்டும் கிடையாது. பிரியங்கா காந்தியை நன்கு அறிந்த உத்தரப் பிரதேச மாநிலத்திலும் காங்கிரஸ் கடுமையாக சொதப்பி வைத்துள்ளது. ஹத்ராஸ் பாலியல் பலாத்கார சம்பவத்தின்போது, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி போன்றோர் களத்துக்கு வந்த போராடினர். ஏற்கனவே பிரியங்கா காந்திக்கு உத்தரபிரதேசத்தில் பொறுப்பு கொடுக்கப்பட்டு யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான தலைவியாக முன் நிறுத்தப்படுகிறார். ஆனால் நடந்தது என்ன? ஏழு தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் வெல்ல முடியவில்லை. பாஜக 6 தொகுதியை வென்றுள்ளது. சமாஜ்வாதி கட்சி ஒரு தொகுதியை வென்றது. பகுஜன் சமாஜ் கட்சி பலவீனமாக இருப்பதால், அந்த லாபம் காங்கிரசுக்கு வரவில்லை. அது சமாஜ்வாதி கட்சிக்கு ஷிப்ட் ஆகி உள்ளது.
மத்திய பிரதேசத்தை கைவிட்ட தலைமை
மத்திய பிரதேச மாநிலத்தை பொறுத்தளவில் 27 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் 19 தொகுதிகளில் காங்கிரஸ் தோற்றுள்ளது. இத்தனைக்கும் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு பாஜகவுக்கு எம்எல்ஏக்கள் தாவியதால் நடைபெற்ற இடைத் தேர்தல் அது . நினைத்திருந்தால் பாஜக ஆட்சியை கவிழ்க்க இந்த தேர்தலை பயன்படுத்தியிருக்க முடியும். ஆனால், அங்கு கமல்நாத் மட்டும் தனியாக போராடிக்கொண்டிருந்தாரே தவிர, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இந்த வெற்றிக்கு ஆர்வம் காட்டவில்லை.
குஜராத்திலும் மெத்தனம்
குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தலின்போது பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக மாறியது காங்கிரஸ். ஆனால் இப்போது, அதை இன்னும் வளர்த்து எடுக்காமல், விட்டு வேடிக்கை பார்த்துவிட்டது காங்கிரஸ் தலைமை. 8 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களிலும் தோற்று உள்ளது அந்த கட்சி.
கர்நாடகாவில் வரலாறு காணாத தோல்வி
கர்நாடகாவில் தும்கூர் மாவட்டத்திலுள்ள சிரா சட்டசபைத் தொகுதியில் இதுவரை பாஜக ஒருமுறைகூட வென்றது கிடையாது. முன்னாள் மாநில அமைச்சர் ஜெயச்சந்திரா காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட போதிலும்கூட, பெரிதாக அறிமுகம் இல்லாத பாஜக வேட்பாளர் எளிதாக வெற்றி பெற்று தொகுதியை கைப்பற்றியுள்ளார். பெங்களூரு நகரில் உள்ள ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியிலும் பாஜக வென்றுள்ளது. காங்கிரசிலிருந்து பாஜகவுக்கு தாவிய எம்எல்ஏ காரணமாக நடைபெற்ற தேர்தலில் பாஜக வென்றுள்ளது. எங்கெல்லாம் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடி போட்டி இருக்கிறதோ அங்கெல்லாம் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது காங்கிரஸ். காங்கிரஸ் தலைமையின் வெற்றியை நோக்கிய தாகம் இல்லாத மெத்தனப் போக்குதான் இத்தனைக்கும் காரணம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.