திமுக செய்தால் தப்பில்லை.. காங்கிரஸ் செய்தால் தப்பா.. கொக்கரித்த அழகிரி.. கொதிக்கும் கூட்டணி!
சென்னை: திமுக குறித்து காங்கிரஸ் தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, கோபண்ணா ஆகியோர் கருத்தரங்கத்தில் தெரிவித்த கருத்துக்கள், சலசலப்புக்கு காரணமாகியுள்ளன.
அன்னை இந்திராவும் வங்கதேச விடுதலை பொன்விழாவும் என்ற தலைப்பில் நேற்று நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஒரு கருத்தரங்கம் நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதில் அழகிரியும், கோபண்ணாவும் பேசிய பேச்சுக்கள் அறிவாலயத்துக்கு டென்சனை ஏற்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.
10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் குட்டிச்சுவராய் போன சென்னை மாநகரம்... முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை
காமராஜர் ஆட்சி எங்கே
விழாவில் தலைப்பின் பொருள் குறித்து விலாவாரியாக பேசி விட்டு தமிழக அரசியல் குறித்து பேசியிருக்கிறார். அப்போது, "காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்று நாம் சொல்லி வந்ததை அண்மைக்காலமாக விட்டுவிட்டோம் என நம்மை பார்த்து கேள்வி எழுப்புகின்றனர். கூட்டணியில் இருப்பதால் நாம் அந்த முழக்கத்தை விட்டு விட்டதாக கருதுகின்றனர். கூட்டணியில் இருப்பதால் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்பதை நாம் மறந்து விடவில்லை. அந்த முழக்கம் நம் உணர்வோடு கலந்த ஒன்று. தமிழகத்தில் கூட்டணி வைக்காமல் தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக தயாராக இருக்கிறதா? இல்லையே. ஆனால், காங்கிரஸ் மட்டும் ஏன் கூட்டணி வைக்கிறது என ஏன் கேட்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை.
கர்ஜித்த அழகிரி
கூட்டணி வைத்ததால் தான் காங்கிரஸ் செல்வாக்கு சரிந்து போனது. கூட்டணியால் பலன் இல்லை. கிராமம் கிராமமாக சென்று கட்சியை பலப்படுத்துவோம். அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியை நம்மால் பெற முடியும். அதற்கு காங்கிரஸ்காரர்கள் உழைக்க வேண்டும் ; கடுமையாக உழைக்க வேண்டும்" என்று 'கர்ஜித்தார்' அழகிரி.
கோபண்ணா கோபம்
அதேபோல, காங்கிரசின் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா பேசும் போது, "சென்னையில் இருந்து நாமக்கல் வரும்போது வழி நெடுக இருந்த பல விசயங்களை பார்த்துக் கொண்டே வந்தோம். அணைக்கட்டுகள், தொழிற்சாலைகள், கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் என காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பல அடையாளங்கள் இருந்தன. பெருமையாக இருந்தன. இந்த மாநிலம் வளர்ச்சியடைந்ததற்கு நம் காங்கிரஸ் கட்சியும் நம் தலைவர்களுமே காரணம். இதில் வேறு எவருக்கும் கொஞ்சம் கூட பங்கு கிடையாது" என்று சொன்னார்.
திமுக தரப்புக்கு கோபம்
கூட்டணி வைப்பதால்தான் திமுக வெற்றி பெறுகிறது ; கூட்டணியால் காங்கிரஸ் செல்வாக்கு சரிந்து விட்டது; காமராஜர் ஆட்சி அமைப்பதை மறந்து விடவில்லை என்கிற கே.எஸ். அழகிரியின் பேச்சும், காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களால்தான் தமிழகம் வளர்ச்சியடைந்ததாக கோபண்ணா பேசிய பேச்சும் தான் திமுக தரப்பை கடுப்பாக்கியிருக்கிறதாம்.
ரிப்போர்ட் போயுள்ளது
அதாவது, திமுக ஆட்சி காலத்தில் தமிழகம் வளர்ச்சியே அடையவில்லை என்பது போலவும், திமுகவால் காங்கிரசுக்கு எந்த லாபமும் இல்லை என்பது போலவும் தொணிக்கின்ற பேச்சுக்கள்தான் நாமக்கல் மாவட்ட திமுகவினரை வருத்தம் அடைய வைத்திருக்கிறது. அந்த வருத்தத்தையே அறிவாலயத்திற்கு பாஸ் செய்துள்ளனர் நாமக்கல் மாவட்ட திமுக நிர்வாகிகள். இது தவிர, காங்கிரஸ் கருத்தரங்கத்தில் பேசப்பட்ட தகவல்களை உளவுத்துறையும் ஆட்சி தலைமைக்கு அனுப்பி வைத்திருக்கிறது.