திமுக கூட்டணி வேண்டாமா! அப்ப நீங்க ரெஸ்ட் எடுங்க! 2 மாவட்ட தலைவர்களை மாற்றிய காங்கிரஸ்!
சென்னை: திமுக கூட்டணிக்கு எதிராக குரல் கொடுத்த 2 மாவட்டத் தலைவர்களை மாற்றியுள்ளது தமிழக காங்கிரஸ் கமிட்டி.
பேரறிவாளன் விடுதலையை திமுக வரவேற்ற நிலையில் கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலக வேண்டும் என தருமபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிற்றரசு போர்க்கொடி உயர்த்தினார்.
இதையடுத்து அவர் அளித்த ராஜினாமா கடிதத்தை முழுமையாக ஏற்று அவருக்கு ஓய்வு கொடுத்திருக்கிறார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.
பேரறிவாளன் விடுதலை
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை திமுக வரவேற்று கொண்டாடியது. பேரறிவாளனை ஆரத்தழுவி அன்பொழுக வரவேற்று மகிழ்ந்தார் முதல்வர் ஸ்டாலின். இது காங்கிரஸ் பிரமுகர்களின் கண்களை உறுத்தியது. அதன் விளைவாக திமுக காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் தேசியத் தலைமையின் மனவோட்டத்தை அறிந்த தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மேல்மட்ட நிர்வாகிகள் இந்த விவகாரத்தில் அவசரம் காட்டாமல் பொறுமை காத்தனர்.
ராஜினாமா கடிதம்
ஆனால் அதற்குள் தருமபுரி, ஈரோடு மாவட்டங்களில் காங்கிரஸ் தலைவர்கள் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலக வேண்டும் என குரல் கொடுத்தனர். தருமபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிற்றரசு, தனது மாவட்டத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து அது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனுக்கு அனுப்பினார். மீண்டும் தன்னிடம் சமரசம் பேசி பதவியில் தொடரச் சொல்வார்கள் என எதிர்பார்த்த அவருக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் கே.எஸ்.அழகிரி.
புதிய நியமனம்
தருமபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவி. சிற்றரசுவின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு, அவருக்கு பதிலாக மக்களவை முன்னாள் உறுப்பினர் பி. தீர்த்தராமன் தருமபுரி மாவட்ட காங்கிரஸ் பொருப்பாளராக நியமிக்கப்படுகிறார் என அறிவித்துள்ளார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி. இதேபோல் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி. ரவிக்கு பதிலாக திருச்செல்வம் என்பவர் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொருப்பாளராக நியமிக்கப்படுகிறார் எனவும் தெரிவித்துள்ளார்.
திமுக -காங்கிரஸ்
இந்த நடவடிக்கையின் மூலம் திமுக -காங்கிரஸ் கூட்டணி குறித்து நிர்வாகிகள் யாரும் தேவையற்ற முறையில் பேசக்கூடாது என்பதையும் பேசினால் இது போன்று நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும் என்பதையும் கே.எஸ்.அழகிரி உணர்த்தியிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுகவின் தேவை காங்கிரஸ் கட்சிக்கு அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.