தமிழகத்தில் கொரோனாவை ஒழிக்க.. 5 கோடி பேர் தடுப்பூசி போட வேண்டும்.. இதுதான் ஒரே வழி- அமைச்சர் பேட்டி
சென்னை: தமிழகத்தில் குறைந்தபட்சம் 5 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்திவிட்டால் கொரோனா முற்றிலும் ஒழிக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் இயக்கம் தொடங்க உள்ளது.
இந்த நிலையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழகத்தில் 18+ அனைவருக்கும்..தடுப்பூசி பணிகளில் சில தினங்களில் தொடங்கும்..அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தடுப்பூசி இயக்கம்
18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நாளை மறுதினம் தொடங்க உள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைக்க உள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகளுக்கு சென்று தடுப்பூசிகளை செலுத்த உள்ளோம்.
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு முன்னுரிமை
தடுப்பூசி செலுத்துவதற்காக 46 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 9 லட்சம் தடுப்பூசிகள் முதல்கட்டமாக நாளை மறுநாள் முதல் செலுத்தப்படும். ஆலை தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பொதுமக்களுடன் அதிகம் புழக்கத்தில் இருக்கக்கூடியவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களில், 18 முதல் 44 வயது கொண்டவர்களாக இருப்பின் அவர்களுக்கு இந்த தடுப்பூசிகள் செலுத்த முன்னுரிமை வழங்கப்படும்.
பெட் தட்டுப்பாடு இல்லை
சென்னையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் பராமரிப்பு மையங்களில் காலியாக இருக்கிறது. இனிமேல் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கை அமைக்கப்பட உள்ளது. எனவே மக்கள் பயப்படத் தேவையில்லை. ஆக்சிஜன் வசதியும் கிடைக்கிறது. சாதாரண படுக்கை வசதியும் கிடைக்கிறது. சித்த மருத்துவ முகாம்களும் திறக்கப்பட்டு படுக்கைகள் அங்கும் இருக்கிறது.
5 கோடி தடுப்பூசி
தமிழகத்தில் 5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டால் கொரோனா முழுமையாக ஒழிக்கப்படும். 77 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் பணி இப்போது துவங்கியுள்ளது. 5 கோடி தடுப்பூசிகளை பெறுவதற்கான நடவடிக்கைகளில் முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ராதாகிருஷ்ணன் பேட்டி
பேட்டியின்போது, உடனிருந்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், நோய் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றால் நோய் கட்டுப்பாடு மண்டலங்களில் இருப்போர் வெளியே வரக்கூடாது. தேவை இல்லாமல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் தான் நோய் பரவலை குறைக்க முடியும் என்றார்.