அதிகரித்த கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு- சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வர இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.
Recommended Video
நாட்டில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. தமிழகம் 4-வது இடத்தில் இருக்கிறது.
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஒருநாள் கொரொனா மரணங்கள் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா அச்சம்: டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன்- பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்
இரவு நேர ஊரடங்கு
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின் போது, தனியார் / பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது. இரவு நேரங்களில் பொது ஊரடங்கு அமலில் இருப்பதால், வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்தும் இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது.
எவற்றுக்கு அனுமதி?
மாநிலங்களுக்கு இடையேயான பொது, தனியார் பேருந்து சேவைகளின்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலை தவிர்த்தல் ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். எனினும், அவசர மருத்துவத் தேவைகளுக்கும், விமானநிலையம் / இரயில்நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும். மேலும், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறைசார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.
இரவு நேர பணி
மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின்போது செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், இந்நிறுவனங்களில் இரவு நேரப் பணிக்கு செல்லும் பணியாளர்களும், தனியார் நிறுவனங்களின் இரவு காவல் பணிபுரிபவர்களும், தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின், வீட்டிலிருந்து பணியிடத்திற்கு சென்று வீடு திரும்ப அனுமதிக்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு
அத்துடன் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்கெட், காடீநுகறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மற்றும் அனைத்து கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது. இதை கடைபிடிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருளை எடுத்துச்செல்லும் வாகனங்கள் ஆகியவை முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் நீலகிரி, க கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் இன்று முதல் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.