கொரோனா இன்னும் முடியவில்லை... அடுத்த 10 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும் - ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் அடுத்த 10 நாள் கவனமாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் கட்டுப்பாட்டுடன் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நோய் சென்றுவிட்டது என்று நினைக்காமல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என்று மக்கள் நல்வாழ்த்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கேரளாவில் கொரோனா தீவிரமாக பரவி வருவதால் தமிழ்நாட்டில் அடுத்த 10 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 1,573 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 5ஆயிரத்து 647ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் 34,788 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஓணம் பண்டிகைக்குப் பிறகு கேரளாவில் ஒரே நாளில் 31ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பால் தமிழகத்தில் அடுத்த 10 நாள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஜெ. ராதாகிருஷ்ணன்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் 90.24 லட்சம் கோவிஷீல்டு, 14.74 லட்சம் கோவாக்சின் படிப்படியாக செயல்பாட்டுக் ஏற்றவாறு தரப்பட்டுள்ளது. 14 லட்சம் டோஸ் தடுப்பு மருந்துகள் கையிருப்பில் உள்ளன இவை இன்னும் 3 நாட்களுக்கு போதுமானது என்றார். மக்கள் தொகையை பொருத்தவரை ஏற்கனவே நமக்கு குறைந்த அளவில் தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டது . தற்போது ஒரு கோடி தடுப்பூசி கொடுக்கப்பட வேண்டும் என மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் கூறினார்.

பொதுமக்கள் கவனம்
தமிழகத்தில் கட்டுப்பாட்டுடன் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நோய் சென்றுவிட்டது என்று நினைக்காமல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும்.
தேவையற்ற அச்சமோ பதற்றமோ வேண்டாம் மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தாலே கொரோனா பரவலை தடுக்க முடியும் என்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தனி மனித இடைவெளி
சில இடங்களில் அதாவது தேனீர் கடைகள் ,ஹோட்டல்களில் 100 சதவிகித இருக்கைகள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர், அதையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம், உணவு அருந்தும் நிகழ்ச்சிகளில் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்பதை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

100 சதவிகித தடுப்பூசி
மக்கள் நலன் கருதி தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எல்லையோர மாவட்டங்களில் 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் கூட்டம் கூட்டமாக பங்கேற்கின்றனர். இதனை கண்காணிக்க உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கொரோனா பரவல் தீவிரம்
கேரளாவில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கேரளாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஒரே நாளில் 31 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

எல்லையில் கட்டுப்பாடுகள்
கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கிருந்து மக்கள் அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு எல்லையில் பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா 3வது அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். எனவே ஞாயிற்று கிழமை மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது. பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மக்கள் கவனம்
செய்தியாளர்களிடம் பேசிய கேரளா மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், பொதுமக்களையும், அவர்களின் உயிரையும் காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. அடுத்த நான்கு வாரங்களில் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். வரவிருக்கும் மூன்றாம் அலை கொரோனா அச்சுறுத்தலை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மூன்றாவது அலையை கருத்தில் கொண்டு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகள் அமைக்க சுகாதாரத்துறை ஏற்கெனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications