8 பேருக்கு ஓமிக்ரான் அறிகுறி.. தமிழ்நாட்டை கவலைப்பட வைக்கும் "எஸ் ஜீன் டிராப்".. கவனம் ஏன் தேவை?
சென்னை: தமிழ்நாட்டில் மொத்தம் 9 கொரோனா நோயாளிகளுக்கு இதுவரை எஸ் ஜீன் டிராப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே நைஜீரிய பயணிக்கு ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. எஸ் ஜீன் டிராப் காரணமாக மற்ற 8 பேருக்கும் ஓமிக்ரான் இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.. அது என்ன எஸ் ஜீன் டிராப் என்று கேட்கிறீர்களா? உங்களுக்குத்தான் இந்த கட்டுரை!
தமிழ்நாட்டிற்குள்ளும் தற்போது ஓமிக்ரான் கொரோனா வந்துவிட்டது. கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 70க்கும் அதிகமான ஓமிக்ரான் கேஸ்கள் பதிவாகி உள்ளன.
நேற்று தமிழ்நாட்டில் முதல் ஓமிக்ரான் கேஸ் பதிவானது. நைஜீரியாவில் இருந்து வந்தவருக்கு எஸ் டிராப் அவுட் கொரோனா இருந்த நிலையில் அவருக்கு செய்யப்பட்ட ஜீன் சோதனையில் ஓமிக்ரான் இருப்பது உறுதியானது.
எப்படி செய்வார்கள்?
இந்தியாவில் பொதுவாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சோதனை செய்யும் போது அவர்களின் மாதிரிகளில் குறிப்பிட்ட சில ஜீன்கள் இருக்கிறதா என்று சோதனை செய்வார்கள். அதாவது கொரோனாவில் இருக்கும் E, N மற்றும் Rd Rp போன்ற ஜீன்கள் நோயாளியின் மாதிரியில் இருக்கிறதா என்று சோதனை செய்வார்கள். இந்த ஜீன்களில் ஒன்று உடலில் கண்டறியப்பட்டாலும் அவர்கள் கொரோனா நோயாளி என்பது உறுதி செய்யப்படும்.
எஸ் ஜீன்
இப்படி ஒருவகை ஜீன்தான் எஸ் ஜீன். இந்த எஸ் ஜீன் உடலில் இருந்தாலும் அவர்களுக்கு கொரோனா இருப்பதாக அறிவிக்கப்படும். எந்த ஜீன் இருக்கிறது, எந்த ஜீன் இல்லை என்பதை அடிப்படையாக வைத்தே ஒருவருக்கு என்ன வகையான கொரோனா தாக்கி உள்ளது என்று கண்டறியப்படும். இதுவரை கண்டறியப்பட்டுள்ள கொரோனா வகைகள் அனைத்திலும் எஸ் ஜீன் இருப்பது உறுதியானது.
அனைத்திலும் எஸ் இருக்கும்
இதுவரை அதிகாரப்பூர்வமாக கண்டறிப்பட்ட அனைத்து வகை கொரோனாவிலும் எல்லாம் எஸ் ஜீன் உள்ளது. ஆனால் நம்ம ஓமிக்ரான் கொரோனாவில் மட்டும் எஸ் ஜீன் இல்லை. இதைதான் எஸ் ஜீன் டிராப் என்பார்கள். அது ஏன் "எஸ்" ஜீன் இதில் இல்லை என்று நீங்கள் கேட்கலாம். ஓமிக்ரான் கொரோனா 60க்கும் மேற்பட்ட முறை உருமாற்றம் அடைந்துள்ளது. அதில் 32 உருமாற்றங்கள் ஜீன் மாற்றங்கள் ஆகும். இதனால்தான் உருமாற்றத்தின் போது இதில் இருக்கும் எஸ் ஜீன் காணாமல் போய் உள்ளது.
டிரையல் டெஸ்ட் போன்றது
இதை வைத்துதான் ஒருவருக்கு ஓமிக்ரான் உள்ளதா என்று கண்டறிகிறார்கள். மற்ற வகை கொரோனா என்றால் டெஸ்டில் எஸ் ஜீன் இருப்பது தெரிந்துவிடும். ஆனால் ஓமிக்ரான் கொரோனா இருந்தால் எஸ் ஜீன் இருக்காது. எஸ் ஜீன் இல்லை என்றால் அவர்களை ஓமிக்ரான் சந்தேக கேஸ் போல பாவிக்கலாம். உடனே அவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு விரைவாக ஜீன் சோதனை செய்யலாம்.
முன்பே கண்டுபிடிக்கலாம்
அதாவது எல்லோருக்கும் ஜீன் சோதனை செய்து முடிவு வரும் வரை காத்திருக்கலாம் இப்படி எஸ் ஜீன் இல்லாத நபர்களை ஓமிக்ரான் சந்தேக கேஸ்களாக பாவித்து அவர்களுக்கு முன்னுரிமை அளித்து ஜீன் சோதனை செய்யப்படும். இந்தியாவில் இப்படித்தான் ஜீன் சோதனை முடுக்கிவிடப்பட்டுள்ளது. எஸ் ஜீன் இல்லாத கொரோனா நோயாளிகளுக்கு முன்னுரிமை அளித்து ஜீன் சோதனை செய்யப்படுகிறது.
ஏன் இல்லை
தமிழ்நாட்டில் ஏன் இந்த எஸ் ஜீன் மிரட்டுகிறது என்று பார்க்கலாம். தமிழ்நாட்டிற்கு வெளிநாடுகளில் இருந்து வந்த 22 பேருக்கு கொரோனா வந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதில் ஒருவருக்கு ஓமிக்ரான் உறுதியாகிவிட்டது. இவரின் தொடர்பு 7 பேர் மற்றும் காங்கோவில் இருந்து வந்த ஆரணி பெண் ஆகியோருக்கும் கொரோனா உள்ளது.
9 பேர்
இவர்களுக்கு எஸ் ஜீன் இல்லை. எனவே மொத்தம் 9 பேருக்கு எஸ் ஜீன் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஒருவர் உறுதியாகிவிட்டதால் மற்ற 8 பேர் சந்தேக கேஸ்களாக உள்ளனர். இதன் அர்த்தம் இவர்களுக்கு ஒருவேளை ஓமிக்ரான் இருக்கலாம். எஸ் ஜீன் இல்லாத காரணத்தால் இவர்களுக்கு ஓமிக்ரான் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
Recommended Video
முழு முடிவு
ஆனால் முழுமையாக ஜீன் சோதனை செய்த பின்புதான் இவர்களுக்கு உண்மையில் ஓமிக்ரான் இருக்கிறதா என்று சொல்ல முடியும். இதன் மூலம் தமிழ்நாட்டில் ஓமிக்ரான் பரவுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.