தமிழகத்தில் அச்சம் தரும் வகையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது.. சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் அச்சம் தரும் வகையில், படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது:
வாக்களிப்பவர்களுக்கு ஒரு முறை பயன்படுத்தக்கூடிய ரப்பர் கையுறைகள், உள்ளிட்டவை வழங்கப்படும். மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து தான் ஓட்டுப்போட செல்ல வேண்டும். வாக்குப்பதிவு மையங்களில் முககவசம் இருக்கும் என்று எதிர்பார்த்து செல்ல வேண்டாம்.

அச்சம் தரும் வகையில் பாதிப்பு
போதிய அளவுக்கு சமூக இடைவெளி விட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தளவில் வைரஸ் பாதிப்பு படிப் படியாக ஏறிக்கொண்டே செல்கிறது. பஞ்சாப் போன்ற மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு சதவீதம் அதிகமாக இருக்கிறது. அந்த அளவுக்கு தமிழகத்தில் இல்லை என்ற போதிலும் கூட தமிழகத்தில் அச்சம் தரும் வகையில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்புகள் ஏறிக்கொண்டே செல்கிறது.

அதிகாரிகள் தீவிரம்
தலைமைச் செயலாளர் தொடர்ந்து கண்காணிப்பு கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார். பரிசோதனை செய்வது, ஒருவருக்கு நோய் வந்தால் அவருடன் தொடர்பு கொண்டவர்களை கண்டுபிடித்து பரிசோதனை செய்வது, அவர்களை தனிமைப்படுத்துவது போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம்.

7ம் தேதி முதல் சுறுசுறுப்பு
கட்டுப்பாடு பகுதிகளில் வீட்டுக்கு வீடு சென்று காய்ச்சல் பரிசோதனை உள்ளிட்டவற்றை முழுவீச்சில் செய்து வருகிறோம். தேர்தல் நேரத்தில் வீட்டுக்கு வீடு சென்று பரிசோதனை செய்தால் தேவையற்ற குழப்பம் ஏற்படும் என்பதால்தான் காத்து இருந்தோம். 7ம் தேதிக்கு மேல் முழு வீச்சில் அந்த பணிகளை மேற்கொள்வோம்.

தடுப்பூசி போட மாட்டேன் என்கிறார்கள்
54 லட்சம் வரையான தடுப்பூசிகள் தமிழகத்தில் ஸ்டாக் உள்ளன. 400க்கும் மேற்பட்ட தடுப்பூசி மையங்கள் செயல்படுகின்றன. ஆனால் 15 ஆயிரம் பேர்தான் நேற்று தடுப்பூசி போட்டனர். தேர்தலுக்கும் தடுப்பூசி போடுவதற்கும் தொடர்பு கிடையாது. கொரோனா பாதிப்பு அதிகமாக சென்று கொண்டு இருக்கும் இந்த சூழ்நிலையில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட வேண்டும். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போட வாருங்கள் என்று பிரச்சாரம் செய்ய முடியவில்லை. 7ம் தேதி முதல் அந்த பிரச்சாரம் தீவிரப்படுத்தப்படும்.

தடுப்பூசி பலன்
தடுப்பூசி இரண்டு முறை போட்ட பிறகும் கூட, சிலருக்கு நோய் பாதிப்பு வரும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கொரோனா தீவிர பாதிப்பாக அவர்களைத் தாக்காது (உயிருக்கு ஆபத்தை விளைவிக்காது) என்கிறார்கள். எனவே, தடுப்பூசி எந்த அளவுக்கு அவசியம் என்பது பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு இருக்க வேண்டும்.

லாக்டவுன் வதந்தி
மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். தேர்தலுக்கு பிறகு மொத்தமாக லாக்டவுன் கொண்டுவரப்படும் என்று கூறும் தகவல்களை நம்ப வேண்டாம். ஆனால் தலைமைச் செயலர் கூறியபடி, படிப்படியாக தேவைக்கேற்ப, அத்தியாவசியமற்ற பணிகளை கட்டுப்படுத்தலாம். மகாராஷ்டிரா மாதிரி நமக்கு நிலவரம் கை விட்டுப் போகாமல் இருக்கும் அளவுக்கு கட்டுப்பாடு தேவை. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் முழு கட்டுப்பாடு கொண்டுவரப்படும். தன்னார்வலர்கள் வீடுகளுக்கே சென்று அவர்களுக்கு தேவையான பொருட்களை கொடுப்பார்கள். திருமண நிகழ்ச்சிகள் போன்றவற்றில் அதிகப்படியான மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். கலாச்சார நிகழ்ச்சிகள், தேவையற்ற பயணங்கள் உள்ளிட்டவற்றை தடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications