1.8 லட்சம் பயணிகளுக்கு கொரோனா சோதனை.. சிறப்பு கிளீனிக்.. 4 மையங்கள்.. அமைச்சர் விஜயபாஸ்கர் செம!
கொரோனா வைரஸ் தொடர்பாக தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு விமான நிலையங்களில் இதுவரை 1.8 லட்சம் பயணிகள் சோதனை செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: கொரோனா வைரஸ் தொடர்பாக தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு விமான நிலையங்களில் இதுவரை 1.8 லட்சம் பயணிகள் சோதனை செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
கொரோனா வைரஸ் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களை அச்சுறுத்தி வருகிறது. முக்கியமாக தென்னிந்தியாவில் இந்த வைரஸ் காரணமாக கேரளா மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 22 பேருக்கு வைரஸ் தாக்கியுள்ளது.
அதிகமாக மகாராஷ்டிராவில் 42 பேருக்கு வைரஸ் தாக்கியுள்ளது. அங்கு ஏற்கனவே இந்த வைரஸால் ஒருவர் பலியாகி விட்டார். கர்நாடகாவில் 11 பேருக்கு வைரஸ் தாக்கியுள்ளது. அங்கு ஒருவர் இதனால் பலியாகி உள்ளார்.
ஆனால் தமிழகம்
ஆனால் தமிழகத்தில் இந்த வைரஸால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தமிழகத்தில் ஒருவருக்கு இந்த வைரஸ் தாக்கியது. காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு இந்த வைரஸ் தாக்கியது. ஆனால் அவரும் அதன்பின் குணப்படுத்தப்பட்டார். மூன்று நாட்களுக்குள் இவரின் டெஸ்ட் ரிசல்ட் நெகட்டிவ் என்று வந்தது. தமிழகத்தில் அதன்பின் வேறு யாருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்படவில்லை.
என்ன சொல்கிறார்
கொரோனாவிற்கு எதிராக தமிழகத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், தமிழகத்தில் கொரோனாவிற்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. பல்லவன் பேருந்து டிபோட்டில் எல்லா பேருந்துகளும் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு,மருந்துகள் தெளிக்கப்படுகிறது. தமிழகம் முழுக்க இது செய்யப்படுகிறது. மக்கள் ஒருவரிடம் ஒருவர் நெருங்காமல் இருக்க போதுமான அளவில் ஒத்துழைக்க வேண்டும்.
எத்தனை பேர்
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி,
இதுவரை விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்ட பயணிகள்- 189750
சந்தேகத்தின் பெயரில் தொடர்பில் இருக்கும் பயணிகள் -2984
தனி வார்டில் உள்ளவர்கள் - 1120
தற்போது அட்மிட் ஆகி உள்ளவர்கள்- 32
இதுவரை டெஸ்ட் செய்யப்பட்ட மாதிரிகள் - 222
நெகட்டிவ் -166,
பாஸிட்டிவ் - 1 (பழையது)
இன்னும் முடிவு தெரியாதது- 55
எத்தனை இடங்கள்
தமிழகத்தில் கொரோனா உள்ளவர்களை தனிமைப்படுத்துவதற்காக இப்போதே இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 4 இடங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 500 பேர் வரை தங்க முடியும். இப்போது உள்ள நிலவரத்துக்கு இந்த இடம் போதுமானதாக இருக்கும். தேவைப்பட்டால் மத்திய அரசின் அறிவுரையின் பெயரில் இந்த இடங்கள் அதிகரிக்கப்படும்.
மருத்துவமனை
அதேபோல் கொரோனா தாக்கியவர்களை சிகிச்சை அளிப்பதற்காக ராஜிவ் காந்த் அரசு மருத்துவமனை சென்னையில் இதற்காக கிளினிக் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு நேற்று புறநோயாளிகள் 137 பேர் வந்தனர். இதில் 22 பேர் இரவில் வந்துள்ளனர். 62 பேர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நீங்கள் கொரோனா பாதித்த இடங்களுக்கு சென்றுவிட்டு திரும்பி இருந்தால் உடனே அரசுக்கு தெரியப்படுத்துங்கள், என்று விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.