தமிழகத்தில் இன்று முதல் பேருந்துகள் இயக்கம்;வழிபாட்டு தலம், பார்க்குகள் திறப்பு-தனியார் பஸ்கள் ஓடாது
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் மாவட்டங்களுக்குள் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படுகின்றன.
கொரோனா லாக்டவுனால் தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வந்தன. கடந்த 5 மாதங்களாக பேருந்து போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மத்திய அரசு லாக்டவுன் கட்டுப்பாடுகளை பெருமளவு தளர்த்தியது. இதனடிப்படையில் மாநில அரசுகளும் லாக்டவுனின் பல்வேறு தளர்வுகளை அறிவித்திருக்கின்றன. தமிழகத்தில் இ பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் கொரோனா தொற்று...உயிரிழப்பில் மெக்சிகோவை பின்னுக்குத் தள்ளிய இந்தியா!!
கட்டுப்பாடுகள் தளர்வு
மேலும் இன்று முதல் மாவட்டங்களுக்குள் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதேபோல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களை திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களும் இன்று முதல் திறக்கப்படுகிறது. தங்கும் வசதி கொண்ட ரிசார்ட்டுகள், ஹோட்டல்களும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் முழுமையாக செயல்படலாம் என்ற போதும் திரையரங்குகளுக்கு அனுமதி இல்லை.
சென்னையில் மெட்ரோ ரயில்
சென்னையில் வரும் 7-ந் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும். சினிமா படப்பிடிப்புகளும் 75 பேருடன் நடத்தலாம் எனவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே பல்வேறு காரணங்களை முன்வைத்து தனியார் பேருந்துகளை இயக்குவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு லாக்டவுன் ரத்து
அத்துடன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கடைபிடிக்கப்பட்ட முழு லாக்டவுன் முறையும் இனி இல்லை. ஆனாலும் 5 பேருக்கு மேல் கூடக் கூடாது என்கிற 144 தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும். கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், பொழுது போக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்களுக்கான தடை தொடர்ந்து நீடிக்கும்.
தொடரும் தடை
மதம் சார்ந்த கூட்டங்கள், அரசியல் கட்சி கூட்டங்கள், கல்வி விழாக்கள், ஊர்வலங்கள் உள்ளிட்டவைகளுக்கான தடையும் தொடரும். கடற்கரைகளுக்கு செல்லவும் தடை தொடருகிறது. கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு செல்ல மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்ற இ பாஸ் தேவை எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.