சென்னையில் ராட்டின விபத்தில் சிறுமி பலி.. மீண்டும் விசாரிக்க ஹைகோர்ட் ஆணை பிறப்பிப்பு
சென்னை: சென்னையில் பொழுது போக்கு பூங்கா ஒன்றில் ராட்டினத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு சிறுமி உயிரிழந்த வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2016ம் ஆண்டு நடைபெற்ற விபத்து தொடர்பாக நீலாங்கரை போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என்றும் பொழுது பூங்கா நிர்வாகத்திற்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கை விரைந்து விசாரித்து முறையாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ஈசிஆர் சாலையின் தீம் பார்க்
சென்னை திருவான்மியூர் அடுத்த ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு தனியார் பொழுது போக்கு விளையாட்டு பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான எல்லா தரப்பினருக்கும் ஏற்ற வகையில் விளையாட்டுகள் உள்ளன. ராட்சஸ ராட்டினங்களில் சவாரி செய்வது உள்பட பல விளையாட்டுகள் இங்கே உள்ளன. சென்னை மற்றும் புறநகரை சேர்ந்த மக்கள் குடும்பத்துடன் விடுமுறை நாட்களில் இங்கு பொழுது போக்குவது வழக்கம்.
ராட்டின விபத்தில் சிறுமி பலி
இந்நிலையில் 2016ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் கழிப்பட்டூரை சேர்ந்த பாபு என்பவர் தன்னுடைய மனைவி மற்றும் மகள்களுடன் இந்த பொழுது பூங்காவிற்கு சென்றார். ஒவ்வொரு விளையாட்டையும் மகிழ்ச்சியுடன் அனுபவித்த அவர்கள் கடைசியாக வேவ் சில்வர் என்ற ராட்டினத்தில் விளையாடுவதற்காக சென்றனர். பாபுவின் மனைவி மற்றும் இளைய மகள் அந்த ராட்டினத்தில் ஏறி அமர்ந்தனர். ராட்டினம் சுற்ற ஆரம்பித்தது. ஆனால் சிறிது நேரத்தில் ராட்டினத்தில் கோளாறு ஏற்பட்டு மனைவியும், மகளும் தூக்கி வீசப்பட்டனர். இருவரும் தரையில் விழுந்து படுகாயம் அடைந்தனர். ஆனால் படுகாயம் அடைந்த மகள் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
முறையாக விசாரிக்கவில்லை
இதுகுறித்து நீலாங்கரை காவல்நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டு விசாரணை தொடங்கியது. ஆனால் 2016ம் ஆண்டு முதல் நடைபெறும் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என பாதிக்கப்பட்ட பாபு தெரிவித்துள்ளார். இது மட்டுமின்றி இந்த வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் என பலமுறை நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தும் அது கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் குற்றப்பத்திரிக்கை முறையாக தாக்கல் செய்யவேண்டும் என பாதிக்கப்பட்டவர் தரப்பில் சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. மேலும் நீலாங்கரை போலீசார் பொழுதுபோக்கு பூங்காவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
12 வாரத்தில் விசாரித்து முடிக்க ஆணை
இதற்கிடையே வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, டிஎஸ்பி அந்தஸ்த்தில் உள்ள ஒரு அதிகாரியை நியமித்து விசாரிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். மேலும் இந்த வழக்கு விசாரணையை 12 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் குழந்தை இறந்ததற்கான இழப்பீடு தொகையை மனுதாரர் பாபு தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையத்தை 4 வாரத்தில் அணுகி நிவாரணம் தேடிக்கொள்ளலாம் எனவும் நீதிபதி அறிவுறுத்தல் வழங்கினார்.