அரசியல் ஆதாயம் தேடும் "சீப்பான அரசியல்”.. பாஜக பந்த்தை மக்கள் நிராகரிக்கணும் - முத்தரசன் காட்டம்!
சென்னை : கோவையில் அக்டோடபர் 31 அன்று பந்த் நடத்தப்போவதாக பாஜக அறிவித்திருப்பது அமைதியை சீர்குலைக்கும் செயல் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோவை உக்கடம் அருகே கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக போலீசார் உடனடியாக விசாரணை மேற்கொண்டு, பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிக்கொணர்ந்தனர்.
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கு என்.ஐ.ஏ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்து வரும் கோவையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி பாஜக சார்பில், அக்டோபர் 31ஆம் தேதி பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதை சிபிஐ, சிபிஐஎம் கட்சிகள் கண்டித்துள்ளன.
கோவை கார் வெடிப்பு சம்பவம்.. அண்ணாமலையின் அழுத்தத்தால் என்ஐஏ விசாரணை.. சொல்கிறார் எச்.ராஜா!
பாஜக பந்த்
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பாஜக தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், பந்த் அறிவிக்கப்பட்டது. தமிழக அரசின் மெத்தன போக்கையும், தமிழக அரசின் பயங்கரவாதத்தை மூட மறைக்க வேண்டும் என்ற எண்ணத்தை கண்டித்தும் பாஜக கோவை மாநகர மாவட்டம் சார்பில் அக்டோபர் 31ஆம் தேதி பந்த் நடைபெறும் என பாஜக அறிவித்தது. அக்.31 அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் நடத்த பொதுமக்கள், வியாபாரிகள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாஜக பந்த் நடத்தும் திட்டத்தை இடதுசாரி கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
போலீஸ் வேகம்
இதுகுறித்து சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 23-ஆம் தேதி கோவை மாநகர உக்கடம் பகுதியில், கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபின் என்பவர் மரணமடைந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக காவல்துறை விரைந்து செயல்பட்டு, சமூக விரோத சதிவேலை திட்டத்தை முறியடித்து, குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் நிகழ்ந்தவுடன் தமிழ்நாடு டிஜிபி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியுள்ளார். தனி போலீஸ் படைகள் அமைத்து விசாரணையும் தொடர்கிறது.
என்.ஐ.ஏ விசாரணை
இது தொடர்பாக தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர், கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை முதன்மை செயலாளர் டிஜிபி, உளவுத் துறை தலைவர் ஆகியோருடன் ஆலோசித்து, கோவை மாநகர மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்துள்ளார். மூன்று காவல் நிலையங்கள் மற்றும் சோதனைச் சாவடிகள் உடனடியாக அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், குற்றச் செயல்களின் சதி வேலை பின்னால் நாடு தாண்டிய பயங்கரவாதத்துடன் தொடர்பு கொண்டிருக்கலாம் என்ற கருத்தில் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஜமாத்தில் இடமில்லை
கோவை மாவட்ட மக்களின் நல்வாழ்வோடு இரண்டறக் கலந்து இயங்கி வரும் அரசியல் கட்சிகள், பொது நல அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள் கூடி அனைத்துப் பிரிவு மக்களும் ஒன்றுபட்டு அமைதி நிலையை பராமரித்து வர வேண்டும் என்றும், சமூக விரோத சக்திகளை தனிமைப்படுத்த உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கார் வெடிப்பில் மரணமடைந்தவரின் குற்றப் பின்னணியை அறிந்த முஸ்லீம் ஜமாத்தார் அவரது இறுதி சடங்குக்கு ஜமாத்தில் இடமில்லை என்ற அறிவித்துள்ளனர்.
அரசியல் ஆதாயம் தேடும் பாஜக
சமூக அமைதியை பாதுகாப்பதில் தமிழக அரசும், அனைத்துப் பிரிவு மக்களும் ஒருங்கிணைந்து செயல்படும்போது, சமூக அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் பாஜக அக்டோபர் 31 அன்று பந்த் அறிவித்திருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், பாஜக, சங் பரிவார் கும்பலின் அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலை கோவை மாவட்ட மக்கள் நிராகரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.