கொள்கையே முக்கியம்.. ரங்கராஜ் பாண்டே விருது தேவையில்லை.. அதிரடியாக நிராகரித்தார் நல்லகண்ணு!
ரங்கராஜ் பாண்டே அறிவித்த விருதை புறக்கணித்தார் நல்லகண்ணு
சென்னை: ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே தனது சாணக்யா யூடியூப் சேனலின் முதலாம் ஆண்டு விழாவில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுவுக்கு சாணக்யா விருது அறிவித்திருந்தார்.. இந்த விருதினை நல்லகண்ணு புறக்கணித்துள்ளார்... நல்லகண்ணு விருதை புறக்கணித்து விட்டார் என்று அறிந்ததுமே ஏராளமானோர் அவரது இந்த முடிவை வரவேற்று பாராட்டு தெரிவித்து வருகின்றனர்!
ரங்கராஜ் பாண்டே சாணக்யா என்ற யுடியூப் சேனல் நடத்தி வருகிறார்... இந்த சேனல் பொதுப்படையானது இல்லை என்பது பெரும்பாலானவர்களின் கருத்து.. அதேசமயம், இவர் மீது பாஜக ஆதரவாளர் என்ற முத்திரை விழுந்துள்ளதையும் மறுப்பதற்கில்லை!
இந்நிலையில், தனது சாணக்யா யூடியுப் சேனலின் முதல் வருடம் நிறைவு பெற்றுள்ளது.. இந்த முதலாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி அரசியல்வாதிகளுக்கு விருது அறிவித்திருந்தார் பாண்டே.. இன்று வழங்கப்படும் இந்த விருதுகள் குறித்து, இதை பற்றி தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார்.
அதிர்ச்சி
அதில், தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக அரசியல்வாதிகளுக்கு சாணக்யா விருது என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு ஆகியோருக்கு விருது வழங்கப்படும் என அறிவித்திருந்தார். பாண்டே விருது அளிக்க அறிவித்திருந்தது ஜனநாயக அமைப்பினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிவப்புக்கு காவி விருது
பாஜகவின் திட்டங்களுக்கு ஆதரவாக, இந்துத்துவா கருத்தியலை கொண்டு செயல்படுவதால் இந்த விருதை தோழர் நல்லகண்ணு புறக்கணிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்தவாறே இருந்தனர். "சிவப்புக்கு காவி விருது தருவதா? சமத்துவத்தின் நிறம் சிவப்பு.. சனாதனத்தின் நிறம் காவி.. தியாகத்தின் நிறம் சிவப்பு.. எப்படி பொருந்தும்" என்று கேள்விகளை கேட்டு, அதிமுக அரசிடம் வீடே பெற்றிருக்க கூடாது, நல்லகண்ணுவுக்கு விருது கொடுக்கும் அளவுக்கு ரங்கராஜ் பாண்டே ஒரு ஆளே இல்லை என்றும் கருத்துக்களை பதிவிட துவங்கிவிட்டனர்.
பாண்டே
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பாண்டேவின் இந்த விருதை புறக்கணித்துள்ளார். இததனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.. அதை வரவேற்று ஒரு பதிவும் போட்டுள்ளார்.. அதில், "எண்பது ஆண்டுகளாக இலட்சிய உறுதியோடு வாழும் அய்யா நல்லகண்ணு அவர்கள், கொள்கை உறுதியோடு வாழும் இன்றைய தலைமுறையின் வழிகாட்டி. நண்பர் ரங்கராஜ் பாண்டே அவர்கள் அறிவித்துள்ள விருதினை அவர் ஏற்க மாட்டார். அதில் கலந்துகொள்ள மாட்டார். கொள்கையில் சமரசம் இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.
எதிரிகள்
நல்லகண்ணு விருதினை புறக்கணித்த செய்தி அறிந்து பலரும் அதை வரவேற்றும் வருகின்றனர்... கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தாலும் எல்லா தரப்பு அரசியல் கட்சி தலைவர்களால் விரும்பப்படுபவர் நல்லகண்ணு.. எதிரிகள் என்பதே இவருக்கு இந்த நொடி வரை கிடையாது.. ஒரு சின்ன குறையும், கறையும் இல்லாமல் துடிப்புடன் கட்சி பணியில் ஈடுபட்டு கொண்டு இருப்பவர்... கம்யூனிஸ கொள்கையில் உறுதிப்பிடிப்புடன் இருக்கும் நல்லகண்ணு பாண்டேவின் சாணக்யா விருதை புறக்கணித்துள்ளது, மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது!!
கொள்கை பிடிப்பு
யார் விருது கொடுத்தாலும் வாங்குவதற்கு வாய் பிளந்து நிற்பவர் கிடையாது நல்லகண்ணு... அவருடைய 80-வது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்தது கட்சி... ஆனால் "ஒரு கோடி வெச்சிட்டு நான் என்ன செய்ய?" என்று அதை அந்த மேடையில் வைத்து கட்சிக்கே திருப்பி தந்தவர் ஆயிற்றே... சுதந்திரம் வேண்டி போராடி, சிறை சென்று தியாகத்தால் புடம் போட்ட நல்லகண்ணுவுக்கு விருது, பரிசெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.. கொள்கையில் சமரசமற்ற போராளி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் காம்ரேட் நல்லகண்ணு!!