ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: எடப்பாடிக்கு குற்ற உணர்வேயில்லை.. இது கிரிமினல்தனம்! மார்க்சிஸ்ட் ஆவேசம்
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை நேற்று (அக்.18) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பல்வேறு விஷயங்கள் தெரியவந்தன.
இதில் காவல்துறை மேற்கொண்டிருந்த அத்துமீறல்கள் குறித்து குற்றம்சாட்டப்பட்டிருந்தது. மேலும் முக்கிய அதிகாரிகள் உட்பட 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிக்கை வலியுறுத்தி இருந்தது.
இந்நிலையில், இன்று சபாநாயகரை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி போராட்டம் நடத்தியுள்ளார். இந்த போராட்டம் குறித்து சிபிஎம் விமர்சித்துள்ளது.

துப்பாக்கிச்சூடு
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்களும், சில இயக்கங்களும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருந்தன. கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற இந்த போராட்டம் 100வது நாளை எட்டிய நிலையில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்னே பெருமளவு மக்கள் திரண்டு ஆலைக்கு எதிராக முழக்கமிட்டனர். இதில் வன்முறை வெடித்ததாக காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விசாரணை
சம்பவம் குறித்து விசாரணை நடத்த அப்போதைய அதிமுக அரசு சார்பில் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் சார்பில் ஏற்கெனவே அறிக்கை அளிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (அக்.18) இந்த அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் காவல்துறை அதிகாரிகள் உட்பட 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.

உண்மைகள்
இந்நிலையில், எதிர்க்கட்சித் துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்காததை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தியுள்ளனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளதாவது, "தூத்துக்குடி, ஸ்டெர்லைட் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு படுகொலைகள் தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை பல்வேறு உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளது.

மன்னிக்க மாட்டார்கள்
அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிதான், அனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும். ஆனால், இதுவரையிலும் ஏதோ அப்பாவி போல ஊடகங்களிடம் நடித்து வந்தார். இப்போதும், துப்பாக்கிச் சூட்டின் கொடூரம் தொடர்பாக கள்ள மெளனம் சாதிப்பதுடன், சபாநாயகரை கண்டித்து உண்ணாவிரதம் என்ற பெயரால் திசைதிருப்பும் நோக்கத்துடன் ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். தனது ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பெரும் தவறு குறித்த எந்தவித குற்ற உணர்வும் இல்லாத இந்த போக்கு கிரிமினல் தனமான ஒன்று. தமிழ் நாட்டு மக்கள் இதனை மன்னிக்கவே மாட்டார்கள்." என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications