"இந்த 2 மேயர்" சீட் எங்களுக்குதான்.. இ.கம்யூனிஸ்ட் வைக்கும் டிமாண்ட்.. திமுக கூட்டணியில் நடப்பது என்ன?
சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது.
கடந்த அக். மாதம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. அதே வேகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையும் நடத்தி முடிக்க ஆளும் தரப்பு விரும்பியது.
இருப்பினும், கொரோனா 3ஆம் அலை உள்ளிட்ட சில காரணங்களால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு சற்றே தள்ளிப்போனது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. வேட்புமனு தாக்கல் தொடங்கியது.. கொரோனா பரவலால் கடும் கட்டுப்பாடு!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
இந்தச் சூழலில் கடந்த புதன்கிழமை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த அதிகாரப்பூர அறிவிப்பு வெளியிடப்பட்டது. வேட்புமனு இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில், வரும் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 22ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் பல ஆண்டு தாமதத்திற்குப் பின்னர் இப்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
தொகுதிப் பங்கீடு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இதற்கான பணிகளை அனைத்து கட்சிகளும் ஏற்கனவே மேற்கொண்டு வந்தன. தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. திமுக கூட்டணியைப் பொறுத்தவரை, மாவட்ட அளவிலேயே தேர்தல் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அதாவது ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களுடன் கூட்டணிக் கட்சி மாவட்ட நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இடதுசாரிகள்
அதேநேரம் இன்றைய தினம் காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்கள். அதேபோல வரும் காலங்களில் மற்ற கூட்டணிக் கட்சிகளும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் வரும் ஜன. 31ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
முக்கியம்
பொதுவாகச் சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் குறைவான தொகுதிகளில் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் கூட நகர்ப்புற தேர்தல்களில் இடதுசாரிகள் அதிகம் போட்டியிடுவார்கள். மக்கள் போராட்டத்தில் தொடர்ந்து களத்தில் இருப்பவர்கள் என்பதால் உள்ளாட்சி தேர்தல் அதிக இடங்களில் போட்டியிட இடதுசாரிகள் விரும்புவார்கள். இதனால் இந்த முறையும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களைப் பெற இடதுசாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
திட்டம் என்ன
தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஏற்கனவே திமுக மாவட்ட செயலாளர்கள் உடன் இடது சாரி கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டனர். அதில் திண்டுக்கல், மதுரை, நாகர்கோவில், கடலூர் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் இடங்களைப் பெற வேண்டும் என்பது இடதுசாரிகள் விருப்பம். அதேபோல சென்னை சென்னை, கோவை உள்ளிட்ட அதிக இடங்களைக் கொண்ட மாவட்டங்களில் 10 முதல் 20% இடங்களைப் பெற இடதுசாரிகள் திட்டமிட்டுள்ளனர். சென்னையில் அண்ணா நகர், வில்லிவாக்கம், எழும்பூர் ஈஞ்சம்பாக்கம் போன்ற இடங்களில் மாவட்ட வார்டுகளை பெற வேண்டும் என முனைப்புக் காட்டுகின்றனர்.
சிபிஎம்
நகர்ப்புற தேர்தலைக் கருத்தில் கொண்டு தேர்தல் பணிகளை இரண்டு இடதுசாரி கட்சிகளும் ஏற்கனவே தொடங்கிவிட்டன. பல மாவட்டங்களில் ஏற்கனவே மாவட்ட மாநாடு நடந்துள்ளன. இதில் சிபிஎம் கட்சியைப் பொறுத்தவரைக் கடந்த 2006-11 காலத்தில் சிதம்பரம், கோவில்பட்டி, சிவகங்கை நகராட்சிகளைத் தன்வசம் வைத்திருந்தன. எனவே, அதை மீண்டும் எதிர்பார்க்கிறது. ஆனால், திமுக தரப்பில் இதுவரை எந்தவொரு உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
அதேபோல மறுபுறம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரைக் கும்பகோணம், திருப்பூர் மாநகராட்சி மேயர் பதவிகளை எதிர்பார்க்கிறது. மேலும், கூடுதலான மாநகராட்சி, நகராட்சி வார்டுகளை கேட்டுப் பெறவும் இந்திய கம்யூனிஸ்ட் திட்டமிட்டுள்ளது. குறிப்பாகத் தலைநகர் சென்னையில் இதற்கான பட்டியலையே தனியாகத் தயார் செய்து வைத்துள்ளது இந்திய கம்யூனிஸ்ட்!