பொருளாதார ஆய்வு நிறுவனம் ஆக்ஸ்பாமில் ஐடி ரெய்டு.. பின்னணியில் பாஜக.. கடுமையாக விமர்சிக்கும் சிபிஎம்
சென்னை: நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பொருளாதார அசமத்துவமின்மை குறித்து ஆய்வுகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் 'ஆக்ஸ்பாம்' நிறுவனத்தின் மீதும், அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் அறிவு ஜீவி குழுமம் (CPR) மீதும் வருமான வரித் துறை சோதனை மேற்கொண்டது.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் டிஜிட்டல் ஊடகங்களுக்கு நிதியளிக்கும் தொண்டு நிறுவனங்கள் மீதுதான் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொள்கிறது என்றும் அதன் ஒரு பகுதியாகவே மேற்குறிப்பிட்ட இடங்களில் சோதனை மேற்கொள்வதாக ஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தேர்தல் ஆணையத்திடம் பதிவுசெய்து, அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகளுக்கு எதிராக வருமானவரித் துறையினர் தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீங்கள் இருப்பதே நீர்நிலை ஆக்கிரமிப்பில்தான்! சென்னை உயர்நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்த சிபிஎம்
வரி விலக்கு
போலியான முறையில் நன்கொடை பெறுவது மற்றும் வரி ஏய்ப்பு உள்ளிட்ட பணமோசடியில் ஈடுபடும் அரசியல் கட்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கும்படி கடிதம் வழியே தேர்தல் ஆணையம் வலியுறுத்தியிருந்தது. வருமான வரி துறை அறிக்கை ஒன்றின்படி, 2018-19-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத 199 அரசியல் கட்சிகள் ரூ.445 கோடி மதிப்பிற்கு வரி விலக்கு பெற்றுள்ளன. இதுவே, 2019-20-ம் ஆண்டில் இதுபோன்ற 219 அரசியல் கட்சிகள், வருமான வரி துறையிடம் இருந்து ரூ.608 கோடி வரி விலக்கு பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வருமான வரித்துறையினர் ரெய்டு
இந்நிலையில், வருமான வரித்துறையினர் பல்வேறு மாநிலங்களில் இன்று அதிரடி ரெய்டில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக பெங்களூரை தளமாக கொண்ட ஐபிஎஸ்எம்எஃப் நிறுவனத்திலும் வருமான வரித்துறையினர் சோதனையை மேற்கொண்டனர். இந்நிறுவனம், ஆக்ஸ்பாம் இந்தியா, தி கேரவன், தி பிரின்ட் மற்றும் ஸ்வராஜ்யா போன்ற டிஜிட்டல் ஊடகங்களுக்கு நிதியளித்து வருகிறது. மட்டுமல்லாது ஆக்ஸ்பாம்' நிறுவனத்தின் மீதும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
கண்டனம்
இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது "குறைந்தபட்ச விமர்சன குரலைக் கண்டும் கூட மோடி அரசாங்கம் அஞ்சி நடுங்குவது இதன் வழியாக அம்பலமாகிறது" என பாலகிருஷ்ணன் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, "இந்திய சமூகத்தில் நிலவும் வறுமை, பொருளாதார ஏற்றதாழ்வு குறித்து ஆய்வு மேற்கொள்ளும் ஆக்ஸ்பாம் நிறுவனம் மீதும், அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் அறிவு ஜீவி குழுமம் (CPR) மீதும், சுதந்திர ஊடகங்களை ஆதரிக்கும் அறக்கட்டளை மீதும் வருமான வரித் துறை பாய்ந்துள்ளது."
விமர்சனத்தை கண்டு அச்சம்?
"ஊழல் கள்ளக் கூட்டின் வழியாக கோடிகளில் செல்வம் குவிப்போர் மகிழ்ந்திருக்க, அதை கேள்வி எழுப்புவோர் மீது ஒன்றிய அரசு பாய்ந்திருப்பது அப்பட்டமான சர்வாதிகார நடவடிக்கையே. தங்களின் பொய் மூட்டைகளை, கேள்விகளால் அவிழ்க்கும் எவரையும் விடக் கூடாது என்ற எத்தனிப்பிலேயே இந்த அடக்குமுறைகள் ஏவப்படுகின்றன. குறைந்தபட்ச விமர்சன குரலைக் கண்டும் கூட மோடி அரசாங்கம் அஞ்சி நடுங்குவது இதன் வழியாக அம்பலமாகிறது."
அரசுக்கு எதிரான கட்டுரை
"இது போன்ற மோசமான சதிராட்டங்களை அனைத்து மக்களும் ஒருமித்த குரலில் கண்டிக்க முன்வர வேண்டும்" என்றும் கூறியுள்ளார். மேற்குறிப்பிட்ட ஆக்ஸ்பாம், தி பிரிண்ட ஆகியவை ஆளும் கட்சிகளுக்கு எதிராக தொடர்ந்து புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கட்டுரைகளை எழுதி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.