நண்பன் எனக்கூறிவிட்டு... விசாரணை கைதிகளை கொலை செய்வது நியாயமா?... விஜயகாந்த் வருத்தம்
சென்னை: தமிழகத்தில் அதிகரித்து வரும் விசாரணை கைதிகளின் இறப்பு குறித்து தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார். ‛‛காவல்துறை உங்கள் நண்பன் என கூறிவிட்டு, நண்பர்களாக இருக்க வேண்டிய காவலர்களே விசாரணை கைதிகளை அடித்துக் கொலை செய்வது எந்த விதத்தில் நியாயம். இது வேலியே பயிரை மேய்ந்தது போல் உள்ளது'' என விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் விஜயகாந்த். தமிழகத்தில் விசாரணை கைதிகள் இறப்பு குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

வடு ஆறவில்லை
சமீபகாலமாக தமிழகத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்படும் நபர்கள் மர்மான முறையில் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சாத்தான்குளத்தில் தந்தை -மகன் காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தின் வடு இன்னும் ஆறவில்லை.

விக்னேஷ் மரணம்
இந்நிலையில் அண்மையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட சென்னை பட்டினம்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்தார். விக்னேஷின் தலை, கண், புருவம் என்று மொத்தம் 13 இடங்களில் காயம் உள்ளதாக உடற்கூராய்வு அறிக்கை மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தங்கமணி மரணம்
அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் தட்டரணை கிராமத்தை சேர்ந்த தங்கமணி அப்பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக கூறி போலீசார் விசாரணைக்காக அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அதற்கு அடுத்த நாளே அவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். விசாரணைக்கு அழைத்து செல்லும் நபர்களை அடித்துக் கொலை செய்யும் உரிமையை காவல்துறைக்கு யார் கொடுத்தது?

கொலை வழக்கு பதிய வேண்டும்
இதுபோன்ற உயிரிழப்புக்கு காரணமான காவலர்களுக்கு தேமுதிக சார்பில் எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். மேலும் விசாரணை கைதிகளை அடித்துக்கொலை செய்யும் காவலர்கள் உண்மையிலேயே கொலை குற்றவாளிகள் தான். அவர்கள் மீது கொலை வழக்குகள் பதிய வேண்டும். அப்போது தான் உயிரிழந்த விசாரணை கைதிகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கும். மேலும் விசாரணைக் கைதிகள் மர்ம மரண வழக்குகளை சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரிக்க பரிந்துரை செய்ய வேண்டும்.

இது நியாயமா?
காவல்துறை உங்கள் நண்பன் என கூறிவிட்டு, நண்பர்களாக இருக்க வேண்டிய காவலர்களே விசாரணை கைதிகளை அடித்துக் கொலை செய்வது எந்த விதத்தில் நியாயம்?. இந்த சம்பவங்கள் மூலம் வேலியே பயிரை மேய்ந்தது என்ற பழமொழி தான் ஞாபகத்துக்கு வருகிறது. இது கடும் கண்டனத்துக்குரியது'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications