உருவாகும் புயல்..17 மாவட்டங்களில் மழை..உங்க ஊர் இருக்கா செக் பண்ணுங்க வானிலை மையம் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகையில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது மேலும் வலுப்பெற்று, இன்று மாலை புயலாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மாண்டஸ் புயல்
டிசம்பர் 8 ஆம் தேதி காலை வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டி தென்மேற்கு வங்க கடலை அடைய வாய்ப்புள்ளது. இதை தொடர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி, மாண்டஸ் புயலானது நகர வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை உருவாகவுள்ள மாண்டஸ் புயலானது புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையில் கரையை கடக்கும் என சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வெளுத்து வாங்கப்போகும் மழை
டிசம்பர் 8 ஆம் தேதி தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மற்றும் தென் கடலோர ஆந்திராவை ஒட்டியுள்ள பகுதிகளில் கன முதல் மிக கனமழையுடன் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். டிசம்பர் 9 அன்று தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் மற்றும் வட கடலோர தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல, தெற்கு கடலோர ஆந்திராவை ஒட்டிய பகுதியில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சூறாவளி வீசும்
அந்தமான் கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து நாளைய தினம் மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 08.12.2022 அன்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் கவனம்
தமிழக- புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், வட இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் 08.12.2022 அன்று காலை தொடங்கி காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து 08.12.2022 மாலை முதல் 09.12.2022 மாலை வரை மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், 09.12.2022 மாலை முதல் 10.12.2022 காலை வரை மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் வேகத்தில் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 10.12.2022 மாலை மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications