முழு பௌர்ணமி அன்று கரையை கடக்கும் யாஸ் புயல்.. பாதை என்ன?.. தமிழகத்தில் எங்கு மழை பெய்யும்?
சென்னை: வங்கக்கடலில் உருவாக உள்ள யாஸ் புயல் எங்கே கரையை கடக்கும், அதனால் தமிழகத்தில் மழை பெய்யுமா என்று வானிலை ஆய்வு மையம் விளக்கி உள்ளது.
கிழக்கு-மத்திய வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக மாறி வருகிறது. வங்கக்கடலில் நிலவும் வெப்பநிலை காரணமாக காற்றழுத்த தாழ்வு நிலை வேகமாக வலுப்பெற்று வருகிறது.
இன்றும் உயர்த்தப்பட்ட விலை.. பெட்ரோல், டீசல் விலை 15 காசுகள் உயர்வு.. தமிழகத்தில் நிலவரம் என்ன?
வங்கக்கடலில் உருவாகி உள்ள இந்த தாழ்வு நிலை இன்று இரவு அல்லது நாளை அதிகாலை புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வேகம்
இந்த புயலுக்கு யாஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது நினைத்ததை விட வலிமையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் நாளை இரவே இந்த யாஸ் புயல் அதி தீவிர புயலாக உருவெடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
எப்போது கடக்கும்
மே 26ம் தேதி யாஸ் புயல் கரையை கடக்க உள்ளது. கிழக்கு-மத்திய வங்கக் கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது. ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்திற்கு இடையில் யாஸ் புயல் கரையை கடக்கும். அல்லது லேசாக திசை மாறி வங்கதேசம் அருகே கரையை கடக்கும். கரையை கடக்கும் போது புயலின் வேகம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் வேகம்
கரையை கடக்கும் நேரத்தில் புயல் மூலம் வீசும் காற்றின் வேகம் 120 கிமீ வரை இருக்கும். அல்லது அதைவிட குறைவாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக ஏற்படும் சேதத்தை விட, புயல் மூலம் ஏற்படும் கடல் அலைகள்தான் அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கடல் அலைகள்
இந்த புயல் கரையை கடக்கும் 26ம் தேதி முழு பௌர்ணமி. இதனால் கடல் அலைகள் அதிகமாக, உயரமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒடிசா, மேற்கு வங்கத்தில் கடலோர மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்கிறார்கள்.
தமிழகம்
தமிழகத்திலும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்கள் நல்ல மழை பெய்யும். அடுத்த மூன்று நாட்கள் வங்க கடலை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும். குமரி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் கனமழை பெய்ய உள்ளது.