விஜய் அஜித் கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம்! பால் தயிரை ரசிகர்கள் ஆட்டைய போடலாம்! வார்னிங் தரும் தலைவர்
சென்னை : வலிமை பட கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய பால் விநியோக வாகனத்தை மறித்து அதிலிருந்து பால், தயிரினை திருடி பாலாபிஷேகம், தயிராபிஷேகம் செய்தது போல் துணிவு வாரிசு திரைப்பட வெளியீட்டு நாளில் பால், தயிர் திருடப்படலாம் என்பதால் பால் முகவர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என அச்சங்க தலைவர் பொன்னுசாமி எச்சரித்துள்ளார்.
அஜித் குமார் நடித்துள்ள வலிமை திரைப்படமும், விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இரு திரைப்படத்திற்கான முதல் நாள் காட்சிகளின் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்ட நிலையில், திரைப்படத்தை வரவேற்று பல விதமான போஸ்டர்களை அவரது ரசிகர்கள் ஒட்டி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் அஜித் குமார் நடித்துள்ள வலிமை திரைப்படமும், விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் வெளியாக உள்ள நிலையில் வலிமை படத்தின் போது கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வதற்காக பால் பாக்கெட்டுகளை திருடலாம் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி அறிவுறுத்தியுள்ளார்.
எதிரிகளை வெல்லும் வலிமை தரும் கீழப்பாவூர் நரசிம்மர்..வேண்டுதலை நிறைவேற்றிய துர்கா ஸ்டாலின்
பால் திருட்டு
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் வெளியாகும் போதெல்லாம் அத்திரைப்படம் வெளியாகின்ற திரையரங்க வளாகங்களில் வைக்கப்பட்டிருக்கும் அந்தந்த "நடிகர்களின் உயிரற்ற கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம்" செய்கிறோம் என்கிற பெயரில் ஆயிரக்கணக்கான லிட்டர் பாலினை சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் வீணாக்குவதை வாடிக்கையாக கொண்டிருப்பதை நாம் அனைவருமே நன்கறிவோம்."நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெட பூமியில் எரிவதுண்டோ..?" என நாம் புளுங்கிக் கொண்டிருக்க முன்னணி நடிகர்களின் ரசிகர்களோ உயிரற்ற கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்து பாலினை வீணடிக்கும் வெறி மட்டும் தணிந்தபாடில்லை.
பாலாபிஷேகம்
எனவே தான் "ரசிகர்கள் உயிரற்ற கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை தடுக்க வேண்டும்", "ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்" என்கிற முயற்சியில் கடந்த 2016ம் ஆண்டு முதல் நமது தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் முன்னெடுத்து வருவதை அனைவரும் நன்கறிவீர்கள். குறிப்பாக மதிப்பிற்குரிய நடிகர்கள் திரு. ரஜினிகாந்த், திரு. விஜய், திரு. அஜீத், திரு. சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் கவனத்திற்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் மேற்கண்ட கோரிக்கைகளை பதிவு தபால் மூலமாக கொண்டு செல்லப்பட்டது.
தடை செய்ய வேண்டும்
அதுமட்டுமின்றி "உயிரற்ற கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்" என சென்னை பெருநகர காவல் ஆணையரிடமும், காவல்துறை தலைவரிடமும் கடந்த காலங்களில் பலமுறை புகார் மனு அளித்துள்ளோம். ஆனால் இதுவரை நம்முடைய கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட எவர் காதிலும் விழுந்ததாக தெரியவில்லை என்றாலும் விக்ரமாதித்தன் கதையாக நமது முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும் "ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்படுத்த மேற்கண்ட முன்னணி நடிகர்களில் திரு. விஜய் அவர்களை தவிர எவரும் துளியளவு கூட முயற்சி மேற்கொள்ளவில்லை என்பது வேதனைக்குரிய விசயமாகும்.
நாளை ரிலீஸ்
மேலும் தமிழ்நாட்டில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் அவர்களின் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் உள்ள பால் முகவர்களின் கடைகளுக்கு முன்பிருந்து ரசிகர்களும், ரசிகர்கள் எனும் போர்வைக்குள் ஒளிந்திருக்கும் சமூக விரோதிகளும் பாலினை திருடிய சம்பவங்கள் கடந்த காலங்களில் அரங்கேறியுள்ளது என்பதை அனைவரும் நன்கறிவீர்கள். அதுவும் கடந்த ஆண்டில் முன்னணி நடிகரான திரு. அஜீத்குமார் அவர்களின் நடிப்பில் வெளிவந்த "வலிமை" திரைப்படம் வெளியான திரையரங்குகளின் வழியாக சென்ற பால் விநியோக வாகனங்களை மறித்து அதிலிருந்து பால் மற்றும் தயிரினை திருடி உயிரற்ற கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம், தயிராபிஷேகம்" செய்த நிகழ்வுகள் நடந்ததை நாம் எவரும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது.
வாரிசு - துணிவு
இந்த நிலையில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி நாளை (11.01.2023) புதன்கிழமை அன்று முன்னணி நடிகர்களான திரு. அஜித்குமார் அவர்களின் நடிப்பில் "துணிவு" திரைப்படமும், திரு. விஜய் அவர்களின் நடிப்பில் "வாரிசு" திரைப்படமும் வெளியாக இருக்கிறது. அந்த இரண்டு திரைப்படங்களும் வெளியாக இருக்கும் இத்தருணத்தில் திரையரங்க வளாகங்களில் வைக்கப்பட்டிருக்கும் அவரது கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதற்காக ஒரு சில ரசிகர்களும், ரசிகர்கள் எனும் போர்வையில் உள்ள சமூக விரோதிகளும் இன்று நள்ளிரவிலோ அல்லது நாளை அதிகாலை நேரத்திலோ பால் முகவர்களின் கடைகளில் இருந்து பாலினை திருடலாம். இது போன்ற நேரங்களில் நாம் அனைவரும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது கண்டிப்பாக அவசியமாகிறது.
கவனம்
எனவே இன்று (10.01.2023) நள்ளிரவு முதல் தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு தினந்தோறும் நள்ளிரவு தொடங்கி காலை 6.00மணி வரை தமிழகம் முழுவதும் அந்தந்தப் பகுதியில் உள்ள பால் முகவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சுழற்சி முறையில் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதோடு, அந்த திரைப்படங்கள் வெளியாகும் திரையரங்க வளாகங்கள் அமைந்துள்ள சாலை வழியாக நள்ளிரவு முதல் அதிகாலை வரை பால் விநியோகம் செய்ய செல்வதை தவிர்த்து மாற்றுப் பாதையை பயன்படுத்தியும் பால் முகவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை தற்காத்துக் கொள்ளுமாறும், அன்போடு கேட்டு கொள்கிறோம்" என கூறியுள்ளார்.