ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி திடீர் மாற்றம்.. காரணம் என்ன.. விளக்கமளித்த தேர்வு வாரியம்!
சென்னை: தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேதி நிர்வாக காரணங்களால் மாற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பி.எட் முடித்தவர்கள் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். அதன்படி 2022-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் 7ஆம் தேதி வெளியிடப்பட்டது.

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத விரும்புவோர் கடந்த மார்ச் 14ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி உடன் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து சிலர் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதியை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து ஏப்ரல் 26ம் தேதி வரை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வில், முதல் தாளுக்கு 2,30,878 பேர் மற்றும் இரண்டாம் தாளுக்கு 4,01,886 பேர் என 6,32,764 என மொத்தம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இதனனைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளை ஆகஸ்ட் 25 தேதி முதல் 31ம் தேதி வரை நடத்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டிருந்தது. இந்த தேர்வு எழுதுவதற்காக 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது.
இந்த நிலையில் நிர்வாகக் காரணங்களினால் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, தாள் ஒன்றுக்கான தேர்வு செப்டம்பர் 10 ந் தேதி முதல் 15 ந் தேதி வரை கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்பு, தேர்வுக்கால அட்டவணை, அனுமதிச்சீட்டு விபரம் செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும், கம்ப்யூட்டர் வழி தேர்விற்காக பயிற்சி மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சி மேற்கொள்ள, தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications