அன்புள்ள அண்ணா.. பன்னீர் செல்வத்தை பாசத்தோடு அழைத்து பஞ்சர் ஆக்கிய எடப்பாடி பழனிச்சாமி
அன்புள்ள அண்ணா என்று பாசத்தோடு கடிதம் எழுதி பட்டென்று ஒருங்கிணைப்பாளரே இல்லை என்று கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
சென்னை: அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று சொல்வார்கள். அதிமுகவில் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று யாராலும் கணிக்க முடியாத நிலையில் உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு துடுப்பு இல்லாத படகு போலத்தால் அதிமுகவின் நிலை உள்ளது. என்னதான் இரட்டைக்குழல் துப்பாக்கி என்று சொன்னாலும் ஆளுக்கு ஒரு பக்கம் பிய்த்துக்கொண்டு போகத்தான் நினைக்கிறார்கள். இரட்டை இலை மீண்டும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Recommended Video
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. அதிமுக உட்கட்சி பூசல் தொடர்பாக இருவரும் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தை அணுகியுள்ளதால் வரும் 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையே உள்ளாட்சி இடைத்தேர்தலில் சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்தை நிராகரித்த எடப்பாடி பழனிச்சாமி திருப்பி அனுப்பினார். சுவற்றில் அடித்த பந்தாக கடிதம் திரும்பி வந்ததால் அதிர்ச்சியானர் ஓ.பன்னீர் செல்வம். கடிதத்தை நிராகரித்தது ஏன் என்று இப்போது விளக்கம் அளித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. அன்புள்ள அண்ணா என்று பாசத்தோடு அழைத்து பதவியே செல்லாது என்று கூறி பஞ்சர் ஆக்கியுள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரே இல்லை... ஓபிஎஸ் கடிதத்தை நிராகரித்தது ஏன்? எடப்பாடி பழனிச்சாமி அதிரடி
அன்புள்ள அண்ணன்
எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு வணக்கம்.. தங்களின் 29.06.2022-ஆம் தேதியிட்ட கடிதம் பத்திரிகைகளின் வாயிலாகத் தெரிந்துகொண்டேன். பின்னர், திரு. மகாலிங்கம் அவர்கள் வழியாகப் பெறப்பட்டது. கடந்த 23.06.2022 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில், 1.12.2021 அன்று நடைபெற்ற கழக செயற்குழுவால் கொண்டுவரப்பட்ட கழக சட்ட திட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. ஆதலால், அந்த சட்ட திட்ட திருத்தங்கள் காலாவதி ஆகிவிட்டது. எனவே, கழக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல.
வேட்பாளர்கள் அறிவிப்பு
மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக இருக்கும் பதவிகளுக்கு நடைபெற உள்ள தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் 27.06.2022 அன்று முடிவுற்ற நிலையில், இத்தனை நாட்கள் பொறுத்திருந்து, கழகத்தின் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையிலும், 27.06.2022 அன்று கூட்டப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு தாங்கள் உட்பட அனைவருக்கும் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தை புறக்கணித்தீர்கள்
மொத்தம் உள்ள 74 தலைமைக் கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்துகொண்டனர். 4 பேர் உடல்நிலை சரியில்லை என்று தகவல் தெரிவித்திருந்தனர். தாங்கள் அந்தக் கூட்டத்தை புறக்கணித்த நிலையில், தற்போதைய தங்களின் இந்தக் கடிதம் ஏற்படையதாக இல்லை.
பொதுக்குழுவை தடுத்தது ஏன்
அதே போல், நாம் இருவரும் கூட்டாக அழைப்பு விடுத்த, கழகத்தின் பொதுக்குழுவை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காகத் தாங்கள், ஆவடி காவல் ஆணையருக்கு கடிதம் மூலம் புகார் அளித்தும், நீதிமன்றங்களின் மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை செயல்படாத நிலைக்குக் கொண்டு செல்வதற்கான அனைத்துப் பணிகளையும் செய்துவிட்டு, தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்படையுதாக இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
பாசத்தோடு அழைத்து பஞ்சர் ஆக்கிய இபிஎஸ்
ஆரம்பம் எல்லாம் நல்லாதான் இருக்கு என்பது போல கடிதத்தின் ஆரம்பத்தில் அதிமுக பொருளாளர் என்று பதவியை குறிப்பிட்டு பின்னர் அன்புள்ள அண்ணன் என்றும் அழைத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. கட்சியை முடக்க எல்லா வேலையும் செய்து விட்டு கடைசியில் ஒருங்கிணைப்பாளர் என்ற எண்ணத்தில் கடிதம் எழுதுவதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று பட்டென்று பஞ்சராக்கியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. இப்படித்தான் சில தினங்கள் முன்பு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது பேட்டியில்.. அண்ணன் ஓபிஎஸ் துரோகத்தின் அடையாளம் என்று தெரிவித்தார். அண்ணன் என்று சொல்லியபடியே, துரோகம் செய்ததாகவும் கூறினார் ஜெயக்குமார். எடப்பாடியும் இப்போது அதே டோனில் ஓபிஎஸ்சை வறுத்துள்ளார். அதிமுகவில் இரு தலைவர்களிடையே விரிசல் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. இதே நிலை நீடித்தால் கட்சியும் சின்னமும் விரைவில் முடங்கும் என்று உண்மை தொண்டர்கள் கவலைப்பட தொடங்கியுள்ளனர்.