வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி - தீபாவளி வரை கனமழை வெளுக்கும்
தமிழ்நாட்டில் குமரி, நெல்லை, தூத்துக்குடியில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறுவதால் இன்று முதல் 4 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடியில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை கடந்த வாரம் தொடங்கியது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக கொட்டித்தீர்த்த மழையால் 10 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் கொத்தவாச்சேரியில் 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சேத்தியாதோப்பு, பாண்டவையார் தலா 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திருவாரூரில் 8 செ.மீ மழை திருத்துறைப்பூண்டி, பரங்கிப்பேட்டையில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைகிறது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரை, தென்காசி, ராமநாதபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்று முதல் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை வரைக்கும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், குமரிக்கடல் மற்றும் இலங்கையையொட்டி நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு நகரக்கூடும். அதனை தொடர்ந்து 48 மணி நேரத்தில் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறக்கூடும்.
இதன் காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும்
மதுரை, தென்காசி, ராமநாதபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யும். உள்மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவம்பர் 2ஆம் தேதியன்று டெல்டா மாவட்டங்கள், கடலூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்யும்.
நவம்பர் 3ஆம் தேதி மதுரை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தீபாவளி தினமான நவம்பர் 4ஆம் தேதி வட உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும்.
நவம்பர் 5ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குமரிக்கடல் பகுதிகளிலும் மன்னார் வளைகுடா, கேரளா கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications