சம்மர் வெயிலை சமாளிக்க உதவும் கோடை மழை.. அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்குமாம்! எங்கெல்லாம் தெரியுமா
சென்னை: கோடைக் காலம் நெருங்குவதால் பல இடங்களில் வெயில் நம்மை வாட்டி வதைக்கிறது. அதேநேரம் மாநிலத்தில் சில இடங்களில் நல்ல மழையும் பெய்து வருகிறது.
கோடைக் காலம் நெருங்கும் நிலையில், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தே வருகிறது. இதனால் சில மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு கோடைக் காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

மழை
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்தே இருக்கிறது. அதேநேரம் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. திற்பரப்பு (கன்னியாகுமரி) 50 மிமீ மழையும், சின்கோனா (கோவை), பார்வூட் (நீலகிரி), பாலக்கோடு (தர்மபுரி), பொள்ளாச்சி (கோவை), வால்பாறை PTO (கோவை) தலா 40 மிமீ மழையும் பெய்துள்ளது. வெயிலை பொறுத்தவரை அதிகபட்சமாகக் கரூர் பரமத்தியில் 102.2 டிகிரி பரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்தது.

வானிலை மையம்
அதேபோல வரும் நாட்களில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்தும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 5 நாட்களுக்கு மழை
இன்றும் (மார்ச் 31) நாளையும் (ஏப்ரல் 1) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் வரும் ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 4 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை
அதேபோல சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications