காவல் நிலையத்தில் சிசிடிவி கேமரா பதிவு அழிப்பு.... தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!!
சென்னை: காவல் நிலையங்களில் சிசிடிவியில் பதிவாகும் காட்சிகளை காவல்துறையினர் கையாள முடியாத வகையில் அவற்றை பாதுகாத்து வைப்பதற்கான திட்டத்தை வகுக்க கோரி வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த நிஜாமுதீன் என்பவர் தொடர்ந்த வழக்கில், விசாரணை கைதிகள் காவல்நிலையத்திற்குள் கடுமையாக தாக்கப்படுவது, தங்கள் அதிகாரத்தை மீறி காவல்துறையினர் செயல்படுவது என மனித உரிமை மீறல்கள் காவல்நிலையங்களில் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
இதனை தடுப்பதற்கு காவல்நிலையங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்படுவதால், விசாரணைக்கு அழைத்து சென்றவர்கள் தாக்கப்படுவது, லாக் அப் மரணங்கள் தடுக்கப்படுவதற்கும் அது தொடர்பான விசாரணைக்கும் மிக முக்கிய ஆதாரமாக இருக்கும் எனவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றம் சிசிடிவி கேமராக்களை காவல்நிலையங்களில் பொருத்த உத்தரவிட்டும் தமிழகத்தில் காவல்நிலையங்களில் முழுமையாக சிசிடிவி பொருத்தப்படவில்லை என்றும், பல காவல்நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பராமரிப்பு இல்லாமலும் இயங்காத நிலையிலும் இருப்பதாகவும், காவல்நிலையத்திற்குள் நடக்கும் குற்றங்களை மறைக்க சிசிடிவியை காவல்துறையினர் கையாண்டு அவர்களுக்கு சாதகமாக ஆதாரமான காட்சி பதிவுகளை நீக்கி விடுவதாகவும் மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இத்தகைய நடவடிக்கைகள் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை மகன் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தொடர்பாக வழக்கு விசாரணையில் காவல்நிலையத்தில் உள்ள சிசிடிவியை காவல்துறையினர் கையாண்டதால் ஆதாரங்களை அழித்தாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே காவல்நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதோடு, அதை முறையாக பராமரிப்பதற்கும், சிசிடிவியில் பாதிவாகும் காட்சிகளை காவல்துறையினர் அழிக்காமல் பாதுகாத்து வைப்பதற்கு தேவையான திட்டங்களையும், விதிகளையும் உருவாக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வு, இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் தமிழக டிஜிபி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர்6 ம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தனர்.