நீட் விலக்கு விவகாரம்.. மத்திய அரசு கேள்விக்கு விரைவில் பதில்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
சென்னை: நீட் விலக்கு விவகாரம் தொடர்பாக மத்திய அரசு கேட்டுள்ள கேள்விகளுக்கு விரைவில் விரிவான பதில் அனுப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பலகாலமாக நீடித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா 2021 செப்டம்பர் மாதம் 13ம் தேதி நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த மசோதாவை அவர் 142 நாட்கள் கழித்து திருப்பி அனுப்பினார். இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக மீண்டும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்காக மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு ஆளுநர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

மசோதா நிலை
இந்த மசோதா குறித்து மத்திய அரசு அண்மையில் விளக்கமளித்துள்ளது. அதில் தமிழக அரசின் நீட் விலக்கு மசோதான், உள்துறை அமைச்சகத்திற்கு மே 2ம் தேதி வந்து சேர்ந்தது. குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காகவும் மாநில ஆளுநர்கள் அனுப்புகிற சட்ட வரைவுகள் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு கருத்து கேட்பிற்காக அனுப்பப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படுவது நடைமுறை. அது போன்று மத்திய அமைச்சகங்கள் கருத்து கேட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு விளக்கம்
அதனால் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் ஆகியவை தங்களின் கருத்துக்களை அளித்து விட்டன. அவற்றை தமிழ்நாடு அரசிடம் ஜூன் 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பகிர்ந்து கொண்டு விளக்கங்களை கேட்டுள்ளோம். இதுபோன்ற பிரச்சினைகளில் கலந்தாலோசனை நேரம் எடுக்கும்; ஒப்புதலுக்கு கால வரையறை நிர்ணயிக்க இயலாது என கூறப்பட்டது.

மா.சுப்பிரமணியன் விளக்கம்
இதன்பின்னர் நீட் விலக்கு சட்டம் தொடர்பாக மத்திய அரசு தெரிவித்த கருத்துகளின் விவரங்களை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர். இந்த நிலையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவதே அரசின் இலக்கு. இந்த விவகாரத்தில் ஏட்டிக்குப் போட்டியாக கருத்து கூறி நீட் விலக்கு முயற்சிக்கு பின்னடைவு ஏற்படுத்த விரும்பவில்லை.

விரைவில் பதில்
மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சகம் ஆகிய துறைகள் தமிழக அரசிடம் கேட்டுள்ள கேள்விகளுக்கு, விரிவான பதில் தயாராகியுள்ளது. விரைவில் அந்த 2 துறைகள் கேட்ட கேள்விக்கு தமிழக அரசு சார்பில் பதில் அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications