சாலையோரம் அலறித் துடித்த பெண்! பதறியடித்து ஓடிய பெண் போலீசார்! கொஞ்ச நேரத்தில் ’குவா குவா’ சத்தம்!
சென்னை: வேலூரில், நள்ளிரவில் சாலையோரம் பிரசவ வலியால் துடித்த ஆதரவற்ற ஏழை பெண்ணுக்கு, ஓடோடிச் சென்று பிரசவம் பார்த்த தலைமை காவலர் இளவரசிக்கு, காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாநகர பகுதியில் அண்ணா சாலையில் அமைந்துள்ள தெற்கு காவல் நிலையம் அருகே, கடந்த 17-ம் தேதி, சுமார் 2.30 மணி அளவில், ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. அப்போது இரவு பணிக்கு வந்து கொண்டிருந்த தலைமை காவலர் இளவரசி, ஆள் நடமாட்டம் இல்லாத அந்த நேரத்தில், பெண்ணின் அலறல் சத்ததைக் கேட்டதும் திடுக்கிட்டார்.
உடனே பெண் சத்தம் போட்ட அந்த இடத்திற்குச் சென்று பார்த்தபோது, தலைமைக் காவலர் அதிர்ச்சியடைந்தார். நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர், பிரசவ வலியால் துடிதுடித்துக் கொண்டிருந்தார். அந்தப் பெண்ணின் அருகில் 10 வயதில் ஒரு சிறுவனும் இருந்துள்ளார்.

பிரசவம் பார்த்த பெண் காவலர்
இதனால் செய்வதறியாது திகைத்த தலைமை காவலர் இளவரசி, தன்னுடன் வந்த பெண் காவலர் சாந்தியுடன் இணைந்து, அந்த ஏழை பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார். அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, சப் - இன்ஸ்பெக்டர் பத்மநாபன், உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு ஃபோன் செய்து, அந்தப் பெண்ணையும், சிசுவையும் மீட்டு, அருகில் உள்ள பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்தப் பெண்ணுக்குத் தேவையான உதவிகளையும் தலைமை காவலர் இளவரசி உள்ளிட்ட காவலர்கள் செய்தனர்.

நெகிழ்ச்சி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த ஏழை பெண்ணுக்கு, காவலர்களின் வேண்டுகோளுக்கு இணங்க முறையான சிகிச்சை அளிக்கப்பட்டது. நள்ளிரவில் யாரும் இல்லாத நேரத்தில், பிரசவ வலியால் துடிதுடித்த ஏழை பெண்ணுக்கு, பணிச்சுமையிலும் துணிச்சலுடன் பிரசவம் பார்த்த தலைமை காவலர் இளவரசியின் இந்த செயல், பொதுமக்கள் மத்தியில் மட்டுமின்றி, காவலர்கள் தரப்பிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பெண்ணின் விவரம்
பின்னர் அந்தப் பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியைச் சேர்ந்த ஹபானா என்றும், அதே பகுதியைச் சேர்ந்த சானு என்பவருடன் காதல் திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவர் விட்டுச் சென்றுவிட்ட நிலையில், சொந்த வீடு இல்லாததோடு, உறவினர்கள் யாரும் உதவாத நிலையில், வேலூர் அண்ணாசாலையின் ஓரம் தனது மகனுடன் சாலையில் உறங்கியதாக கூறியுள்ளார். மழை காலத்தில் பேருந்து நிலையத்தில் வாழ்ந்து வந்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளர்.

டிஜிபி பாராட்டு
இந்நிலையில், இரவு நேர பணியின்போது, துணிச்சலுடனும், மனித நேயத்துடனும், வலியால் துடித்த ஆதவற்ற ஏழை பெண்ணுக்கு பிரசவம் பார்த்த தலைமை காவலர் இளவரசி, பெண் காவலர் சாந்தி ஆகியோருக்கு தமிழக காவல்துறை டிஜிபி பாராட்டுத் தெரிவித்தார். மனிதாபினத்துடன் நடந்துகொண்ட தலைமை காவலர் இளவரசி, பெண் காவலர் சாந்தி, சப் - இன்ஸ்பெக்டர் பத்மநாபன் ஆகியோரை, தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து, காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி மனதார பாராட்டினார்.












Click it and Unblock the Notifications