சென்னை மெரினா கடலில் மூழ்கிய சிறுவன்.. முதலுதவி அளித்து காப்பாற்றிய டிஜிபி சைலேந்திர பாபு
சென்னை: சென்னை மெரினாவில் இன்று கடலில் மூழ்கி உயிருக்கு போராடிய சிறுவனுக்கு உரிய நேரத்தில் டிஜிபி சைலேந்திர பாபு முதலுதவி வழங்கி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
தலைநகர் சென்னையில் மிகப்பெரிய பொழுதுபோக்கு இடமாக மெரினா கடற்கரை உள்ளது. இதனால் தினந்தோறும் கடற்கரைக்கு ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர்.
Recommended Video
குறிப்பாக விடுமுறை தினங்களில் வழக்கத்தை விட அதிகளவில் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வந்து செல்வது வாடிக்கையானதாக உள்ளது.
மேலும் பலர் கடலில் குளித்தும், விளையாடியும் மகிழ்கின்றனர். இதில் சிலர் எதிர்பாராத விதமாக சிலர் கடல் அலையில் சிக்கிவிடுவதும் அவ்வப்போது நடக்கிறது. இருப்பினும் ஆபத்தை உணராமல் பலர் கவனக்குறைவாக கடலில் இறங்கி விளையாடுவதுடன், குளித்தும் வருகின்றனர். இ வர்களை போலீஸார் எச்சரித்தாலும் அதனை பொருட்படுத்துவதில்லை. இது கவலைக்குரிய விஷயமாகும்.
சென்னை கடலில் மூழ்கிய 3 பேரை மீட்ட மீனவர்கள்! கரைக்கு வந்தபோது சட்டென கவிழ்ந்த படகு.. பெண் பலி
இந்நிலையில் தான் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான மக்கள் சென்னை மெரினா கடற்கரைக்கு படையெடுத்தனர். இந்த வேளையில் எதிர்பாராத விதமாக சிறுவன் ஒருவர் கடலில் மூழ்கி தத்தளித்தார். இதையடுத்து அவர் பத்திரமாக மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டார்.
கரைக்கு வந்தாலும் கூட சிறுவன் இயல்பு நிலைக்கு வரவில்லை. இதனால் சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் பதற்றம் அடைந்தனர். இந்த வேளையில் கடற்கரையில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு நடைப்பயிற்சிக்கு சென்றார். உயிருக்கு போராடிய சிறுவனை பார்த்த அவர் முதலுதவி அளித்தார்.
உயிருக்கு போராடிய சிறுவனின் கண்ணம், நெஞ்சை அழுத்தி இயல்பு நிலைக்கு கொண்டு வந்தார். பின்னர் அந்த சிறுவனை கையில் தூக்கிய டிஜிபி சைலேந்திரபாபு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தற்போது இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. டிஜிபி சைலேந்திர பாபுவை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.