மக்களிடம் நீதி கேட்க தர்மயுத்தம் 2.0.. இது இபிஎஸ் தாத்தா கட்சியில்லை.. எம்ஜிஆர் கட்சி..ஓபிஎஸ் உறுதி
நாங்கள் யாருடைய பி டீமும் அல்ல எடப்பாடி பழனிச்சாமி அணிதான் ஏ முதல் இசட் டீம் ஆக செயல்படுகின்றனர் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: மக்கள் மன்றத்தில் நீதி கேட்கப் போவதாக ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். இது இபிஎஸ், ஓபிஎஸ் ஆரம்பித்த கட்சியில்லை தொண்டர்களுக்காக எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பில் எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்வதாக கூறவில்லை என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
சென்னையை அடுத்த வானகரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை, கட்சி பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியலிருந்தும் நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தப் பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தனி நீதிபதி பொதுக்குழு முடிவு செல்லாது என உத்தரவிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தனர். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி, ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தனர். மேலும் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு அதிக உற்சாகத்தை அளித்துள்ளது.
அதே நேரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் எந்த பின்னடைவும் இல்லை என்று ஓ.பன்னீர் செல்வம் அணியினர் கூறியுள்ளனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் ஓ.பன்னீர் செல்வம் இன்று ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், தங்கள் பக்கம், நியாயம், தர்மம் இருப்பதாக கூறினார். உச்சநீதிமன்ற தீர்ப்பில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லும் என்று எங்கும் கூறவில்லை என்று மனோஜ் பாண்டியன் தெரிவித்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், உச்சநீதிமன்ற தீர்ப்பினால் தங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை என்று கூறினார். தாங்கள் மக்கள் நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் மக்கள் தங்களுக்கு சரியான தீர்ப்பினை அளிப்பார்கள் என்றும் கூறினார்.
நாங்கள் தனிக்கட்சி தொடங்க வேண்டிய அவசியமில்லை என்று கூறிய ஓ.பன்னீர் செல்வம், அதிமுக என்பது எனது தாத்தாவோ, எடப்பாடி பழனிச்சாமியின் தாத்தாவோ தொடங்கிய கட்சி இல்லை. தொண்டர்களுக்காக எம்ஜிஆர் தொடங்கிய கட்சி. அதிமுகவின் விதிமுறைகளின்படி பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என்ற தீர்மானத்தை நீக்குவதற்கு யாருக்கும் உரிமையில்லை என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் செய்தார் ஓ.பன்னீர் செல்வம். இப்போது எடப்பாடி பழனிச்சாமிக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் எதிராகவும் தர்மயுத்தம் செய்யப்போவதாக கூறியுள்ளார். எந்த அளவிற்கு அவர் வெற்றி பெறுவார் என்பதை காலம்தான் தீர்மானிக்கும்.












Click it and Unblock the Notifications