அடடா.. ஒரு ஓட்டையை அடைப்பதற்குள் அடுத்தடுத்து ஓட்டை விழுந்தா என்ன பண்றது.. தோனியின் புலம்பல்!
சென்னை: ஒரு ஓட்டையை அடைப்பதற்குள் இன்னொரு ஓட்டை விழுந்து விடுகிறது என சென்னை அணியின் விளையாட்டு குறித்து அதன் கேப்டன் மகேந்திர சிங் தோனி வேதனை தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கின. அபுதாபியில் முதல் போட்டி நடந்தது. முதலில் மும்பை இந்தியன்ஸும் சென்னை சூப்பர் கிங்ஸும் விளையாடின.
இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி அபாரமாக வென்றது. இதையடுத்து கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி ராயல் ராஜஸ்தானும் சென்னை சூப்பர் கிங்ஸும் இணைந்தும் விளையாடின.
சன்ரைசர்ஸ் அணி
இந்த போட்டியில் ராயல் ராஜஸ்தான் அணி, வென்றது. இதையடுத்து கடந்த 2-ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் சென்னை அணியும் விளையாடியதில் சென்னை அணி மீண்டும் மோசமாக தோல்வியுற்றது. இதையடுத்து கடந்த 4-ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை அணி அபாரமாக வென்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
கடந்த 7-ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இணைந்து விளையாடின. இதில் கொல்கத்தா அணி சூப்பராக வென்றது. இந்த நிலையில் நேற்றைய தினம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதின. கேதார் ஜாதவ் சரிவர விளையாடவில்லை என்பதால் அவருக்கு பதிலாக தமிழக வீரர் ஜெகதீசன் சேர்க்கப்பட்டார்.
ஃபாப் டூ
ஆனால் துயரத்தைப் பாருங்க.. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஷேன் வாட்சனும், ஃபாப் டூ பிளெச்சிஸும் சரிவர விளையாடவில்லை. நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. பின்னால் வந்தவர்களும் கை கொடுக்கவில்லை. ஜெகதீசன் சிறப்பாக ஆடினார். கடைசியில் சென்னை அணி வழக்கம் போல கோட்டை விட்டு தோற்றது.
கை கொடுக்காத சேஸிங்
இதுவரை நடந்துள்ள 7 போட்டிகள் அனைத்திலுமே சென்னை அணி சேஸிங்கைதான் மேற்கொண்டது. அதில் 2 முறை மட்டுமே பலன் கிடைத்தது. மற்ற 5 முறையும் தோல்விதான். இதுதான் சென்னை ரசிகர்களை பெரும் வெறுப்புக்குள்ளாக்கியுள்ளது. இப்படி மோசமாக விளையாடினால் எப்படி என்ற வேதனையில் ரசிகர்கள் உள்ளனர். ஆனால் இப்போது ரசிகர்களைப் போலவே தோனியும் வேதனையில் மூழ்கியுள்ளார்.
ஓட்டை
இதுகுறித்து அவர் கூறுகையில் சென்னை அணி என்னும் கப்பலில் ஏராளமான ஓட்டைகள் விழுந்துள்ளது. கப்பலில் உள்ள ஓட்டையை அடைக்க முற்படுவதற்குள் மற்றொரு ஓட்டை விழுவதாக கேப்டன் தோனி வேதனை தெரிவித்துள்ளார். அதாவது ஜாதவை மாற்றிவிட்டு வேறு வீரரை சேர்த்த நிலையில் மற்ற இரு வீரர்கள் சரிவர விளையாடவில்லை என்பதே தோனியின் வருத்தம்.. ஏதோ பெருசா எங்கேயோ ஓட்டை இருக்கு தல.. அதை அடைச்சுட்டா எல்லாம் சரியாய்ரும்.. அதைப் பார்த்து ஏதாவது சரி பண்ண முடியுமான்னு யோசிங்க.
நல்ல கப்பல்தான்.. கேப்டனும் சூப்பர் கேப்டன்தான்... ஓட்டைதான் பெரிய தலைவலியா இருக்கு.. அதை அடைச்சுட்டா எல்லாம் சரியாய்ரும்.