வாழ்க தமிழ்நாடு.. சிரித்துப் பேசிய முதல்வர்..ஆளுநர் மாளிகை டீ பார்ட்டியில் பங்கேற்பு
ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி காணொளிக் காட்சி மூலம் ஆற்றிய உரையின் இறுதியில், "வாழ்க தமிழ்நாடு! வாழ்க பாரதம்" எனக் கூறியுள்ளார். தமிழ்நாடு என்ற சொல் தொடர்பாக ஆளுநரின் கருத்து சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், ஆளுநரின் பொங்கல் விருந்தை முதலமைச்சர் ஸ்டாலின் புறக்கணித்தார். இந்நிலையில், ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அமைச்சரவை சகாக்களுடன் பங்கேற்றுள்ளார்.
குடியரசு தின விழாவின் போது நடைபெற்ற கலை நிகழ்ச்சியினை தமிழ்நாடு ஆளுநர் ரவி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருவரும் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்து சிரித்துப் பேசியபடி ரசித்தனர்.
கடந்த சில நாட்களாக ஆளுநர் மற்றும் முதலமைச்சர் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்த நிலையில் தற்போது இருவரும் ஒன்றாக அமர்ந்து ரசித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் ஆளுநர் ஆர்.என்.ரவி.. அலங்கார ஊர்தியில் தமிழ்நாடு வாழ்க கோலம்!
தேசியக்கொடி ஏற்றிய ஆளுநர்
இந்தியாவின் 74-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சென்னை கடற்கரை சாலையில் காந்தி சிலை அருகே ஆளுநர் தேசியக்கொடி ஏற்றுவது வழக்கம். தற்போது அந்த இடத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே தேசியக் கொடியேற்றும் விழா நடைபெற்றது. குடியரசு தின விழாவுக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் ஆளுநர் ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
ஆளுநர் உரை
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ரவி காணொளி வாயிலாக மக்களுக்கு உரையாற்றினார். அதில், "நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த தீரமிக்க வீரர்களை நாம் இன்று நன்றியுடன் நினைவுகூர்வோம். நமது ராணுவத்திற்கு நன்றி செலுத்துவோம். காலத்தை வென்ற அரசியலமைப்பை வழங்கிய அம்பேத்கருக்கு நன்றி தெரிவிப்போம். ருக்மணி லட்சுமிபதி குயிலி அஞ்சலை அம்மாள் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்துவோம். வஉசி, பாரதியார், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்துவோம். வீரர்களை தேசம் நன்றியுடன் நினைவுகூர்கிறது.
வாழ்க தமிழ்நாடு
இந்திய பெருமைகளில் ஒன்றாக தமிழ் மொழி திகழ்கிறது. தமிழ் மொழி வளர்ச்சிக்காக மத்திய அரசு பாடுபடுகிறது. இலங்கை தமிழர் நலனுக்காக மத்திய அரசு உதவுகிறது. அங்கு வசிக்கும் தமிழர்களுக்காக வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர் நலனுக்காக தமிழக அரசும் உதவுகிறது.வாழ்க தமிழ்நாடு. வாழ்க பாரதம்" எனக் குறிப்பிட்டார்.
தேநீர் விருந்து
குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று மாலை தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெற உள்ளது. இந்த தேநீர் விருந்துக்கு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த விருந்தைப் புறக்கணிப்பதாக விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் தொலைபேசி வாயிலாகவும் அழைப்பு விடுத்திருக்கிறார்.
புறக்கணித்த ஸ்டாலின்
முன்னதாக, ஆளுநர் ரவி, தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதே பொருத்தமானது எனத் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன. மேலும், சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றும்போது தமிழ்நாடு அரசு தயாரித்து ஆளுநரிடம் வழங்கிய அறிக்கையில் இருந்த சில வார்த்தைகளை ஆளுநர் ரவி வாசிக்காததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநர் மாளிகையில் சமீபத்தில் நடைபெற்ற பொங்கல் விழா விருந்திற்கான அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற வார்த்தையும், தமிழ்நாடு அரசின் இலட்சினையும் இடம்பெறவில்லை. இதன் காரணமாக முதல்வர் ஸ்டாலின், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் இந்த பொங்கல் விருந்தில் பங்கேற்காமல் தவிர்த்தன.
அளவளாவிய ஆளுநர் - முதல்வர்
இந்நிலையில், இன்று மாலை நடைபெறும் தேநீர் விருந்தில் திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ள சூழலில், ஆளுங்கட்சி என்ற முறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வாரா எனக் கேள்விகள் எழுந்துள்ளன. இன்று சென்னையில் தேசியக் கொடியேற்றும் நிகழ்வின்போது சிரித்த முகத்தோடு ஆளுநரை உற்சாகமாக வரவேற்றார் முதல்வர் ஸ்டாலின். அதேபோல, மேடையிலும் இருவரும் சிரித்துப் பேசி அளவளாவினர். இதனால், இன்று தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கக் கூடும் என்ற பேச்சுகள் எழுந்துள்ளன.
முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
ஆளுநரும் தனது உரையில், வாழ்க தமிழ்நாடு எனக் கூறியுள்ளதும், தேநீர் விருந்துக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் அழைத்துள்ளார். இன்று மேடையிலும் இருவரும் நெருக்கம் காட்டினர். இதனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகை விருந்தில் இன்று மாலை பங்கேற்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் பங்கேற்றுள்ளனர். இதனையடுத்து ஆளுநர் - அரசுக்கு இடையேயான மோதல் நிர்வாக ரீதியில் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால், இந்தப் பிரச்சனை இன்றோடு முடிவுக்கு கொண்டு வரப்பட்டு சுமூக நிலை திரும்பும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.