அன்று அப்படி சொன்னார்.. இன்று இப்படி சொல்கிறார்னு கேப்ஷன் போடுவீங்க.. தெரியுமே..! துரை வைகோ கலாய்!
சென்னை : சினிமாவில் காவி நிறம் அணியக் கூடாது என்றால், கறுப்பு ஆடைகள் அணிந்து வில்லனாக நடிப்பதால் திராவிடர் கழகத்தினர் எல்லாம் வில்லன்களா? என மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
வாரிசு அரசியல் பற்றிப் பேச பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு தகுதியே இல்லை, அவரது கட்சியிலேயே பலரது வாரிசுகள் பொறுப்புகளில் இருக்கிறார்கள் என துரை வைகோ தெரிவித்துள்ளார்.
மேலும், நான் எம்.பி தேர்தலில் நிற்பேனா என்பதை முடிவெடுப்பது தலைமை தான். நான் நிற்க மாட்டேன் என்று சொன்னால் உடனே இதை பைட் எடுத்துப் போட்டு, "அன்று அப்படி சொன்னார் இன்று இப்படி சொல்கிறார்" என்று போட்டுவிடுவீர்கள் என சிரித்தபடியே கூறினார் துரை வைகோ.
வெளிநாட்டுக்கு போன கணவன்! கார் வாங்கி கனெக்ட் ஆன வடிவுக்கரசி!நடுரோட்டில் புரட்டியெடுத்த உறவினர்கள்!
மாமனிதன் வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பற்றிய 'மாமனிதன் வைகோ' ஆவணப்படம் சென்னையில் உள்ள மினி உதயம் திரையரங்கில் திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி, அமைச்சர் மா.சுப்பிரமணியன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் துரை வைகோ.
ஆன்லைன் சூதாட்டம்
அப்போது, ஆன்லைன் சூதாட்டங்களால் ஏற்படும் தற்கொலைகள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த துரை வைகோ, "இதுவரை 35க்கும் மேற்பட்டவர்கள் ஆன்லைன் விளையாட்டால் உயிரிழந்துள்ளனர். இந்த தற்கொலைகள் இனி நடக்கக் கூடாது என்பதற்காகத் தான் தமிழ்நாடு அரசு அவசர சட்டம் இயற்றியது. இந்தச் சட்டம் தொடர்பாக ஆளுநர் கேள்வி எழுப்பியதற்கு தமிழ்நாடு
அரசும் உரிய பதில்களை வழங்கியது. ஆனால், இதுவரை ஆளுநர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்கவில்லை.
செவிசாய்க்கவில்லை
இந்த மசோதா மட்டுமல்லாமல், 20க்கும் மேற்பட்ட சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்ளுக்கு தற்போது வரை ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமல் இருந்து வருகிறார். தமிழ்நாடு மட்டுமல்ல கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்களிலும் இதே நிலைதான். ஆன்லைன் விளையாட்டால் வாரத்திற்கு இரண்டு மரணங்கள் நிகழ்கிறது. மனிதாபிமான அடிப்படையில் கூட ஆளுநர் இதற்கு செவிசாய்க்கவில்லை" எனத் தெரிவித்தார்.
யார் வாரிசு அரசியல் செய்வது?
தொடர்ந்து, வாரிசு அரசியலை எதிர்த்து அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ள உள்ளது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த துரை வைகோ, "சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட உதயநிதிக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். அவரை ஜெயிக்க வைத்தது யார்? மக்கள் அவரை தேர்ந்தெடுக்கும்போது எப்படி அவரை வாரிசாக பார்க்க முடியும்?" எனக் கேள்வி எழுப்பினார்.
அண்ணாமலைக்கு தகுதி இல்லை
மேலும் பேசிய அவர், "பாஜகவில் இருக்கும் மூத்த தலைவர்களின் மகன்கள் வட மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக அமைச்சர்களாக கூட இருக்கிறார்கள். கிரிக்கெட் போர்டை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் உள்துறை அமித்ஷாவின் மகன். எனவே வாரிசு அரசியலைப் பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதி இல்லை" எனத் தெரிவித்தார்.
கறுப்பு ட்ரெஸ் வில்லன்கள்
மேலும், பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஆடை சர்ச்சை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த துரை வைகோ, "காவி என்பது ஒரு நிறம். அதை ஒரு இயக்கத்திற்கு சொந்தம் கொண்டாடுவது தவறு. இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என சில மாநிலங்களில் கூறி வருகிறார்கள். நிறைய திரைப்படங்களில் கருப்பு ஆடைகள் அணிந்து வில்லனாக நடிக்கிறார்கள். அப்படி என்றால் திராவிடர் கழகத்தினர் வில்லன்களா? சினிமா துறையினரை சுதந்திரமாக படம் எடுக்க அனுமதிக்க வேண்டும். குறுகிய கண்ணோட்டத்தோடு படத்தை தடை செய்யச் சொல்வது ஜனநாயக நாட்டில் ஏற்புடையது அல்ல" என்றார்.
எம்.பி தேர்தல் பணிகள்
மேலும், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த துரை வைகோ, தேர்தல் பணிகளை இன்னும் தொடங்கவில்லை ஆனால் உறுப்பினர் சேர்ப்பு பணிகள் எல்லா மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதத்தில் உறுப்பினர் சேர்க்கை பணிகள் முழுவதும் முடிந்தபின்னர் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெறும். அதன் பிறகு நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் நடைபெறும் என்றார்.
அன்று அப்படி.. இன்று இப்படி
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த துரை வைகோ, "எனக்கு இதில் தனிப்பட்ட முறையில் பெரிய நாட்டம் கிடையாது. கடந்த முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார்கள், ஆனால் நான் நிற்கவில்லை. ஆனால் தலைமை மற்றும் நிர்வாகிகள் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன். நான் தேர்தலில் நிற்கப் போவதை முடிவெடுப்பது தலைமை தான். நான் நிற்க மாட்டேன் என்று சொன்னால் உடனே இதை பைட் எடுத்துப் போட்டு, "அன்று அப்படி சொன்னார் இன்று இப்படி சொல்கிறார்" என்று போட்டுவிடுவீர்கள்" என சிரித்தபடியே தெரிவித்தார்.