தேர்தல் ஆணையம் வைத்த ‘திடீர்’ ட்விஸ்ட்! எடப்பாடி கையில் அதிமுக? எல்லாம் ஓகே.. ஆஹா! கதை முடிஞ்சுதா?
சென்னை : அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த அதிமுக வரவு செலவு அறிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால், பொதுக்குழு முடிவுகள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளதா எனக் கேள்வி எழுந்துள்ளது.
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.
பொதுக்குழு தீர்மானங்களை ஈபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தது. அதற்கு எதிராக ஓபிஎஸ் தரப்பும் பல்வேறு மனுக்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தது.
அதிமுக பிளவு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் இதுவரை எந்த முடிவும் எடுக்காத நிலையில், தற்போது வரவு செலவு அறிக்கையை ஏற்றுக்கொண்டு இணையதளத்தில் பதிவேற்றியுள்ளதால், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

6 மாதங்களாக
அதிமுகவின் ஒற்றைத் தலைமை யார் என தொடங்கிய உட்கட்சி விவகாரம், கடந்த 6 மாதங்களாக பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எந்தவொரு தீர்மானமும் கொண்டு வரப்படவில்லை. அதற்கடுத்து ஜூலை 11ஆம் தேதி செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை நடத்தி இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதே பொதுக்குழுவில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர்.

வரவு செலவு கணக்கு
அதிமுக பொதுக்குழுவில் வரவு- செலவு கணக்கை அமைப்புச் செயலாளரான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார். வழக்கமாக பொருளாளர் மட்டுமே வரவு செலவு கணக்கை தாக்கல் செய்வார். ஆனால், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவுக்கு வராத நிலையில் அமைப்புச் செயலாளரான விஜயபாஸ்கர் அதனை தாக்கல் செய்தார். பின்னர் கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார்.

மாறி மாறி அரங்கேறிய காட்சி
இந்தப் பொதுக்குழுவில் ஓபிஎஸ் கட்சியை விட்டு நீக்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தார் ஓபிஎஸ். இருதரப்பும் மாறி மாறி கட்சியில் இருந்து நீக்கிய சம்பவங்கள் பல மாதங்கள் அரங்கேறின. இது தொடர்பான அனைத்து வழக்குகளும் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் சென்று, மேல்முறையீடு காரணமாக, தற்போது உச்ச நீதிமன்றம் வரை நீண்டிருக்கிறது. அடுத்தகட்டமாக இந்த வழக்கு விசாரணை வரும் ஜனவரி 4ஆம் தேதி வரவிருக்கிறது.

பதவிகள் நியமனம்
எடப்பாடி, ஓபிஎஸ் இருவரும் மாறி மாறி புதிய நிர்வாகிகளையும் நியமித்து வந்தனர். கட்சியின் பெருவாரியான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கக்கூடிய நபர்களை தன் பக்கம் இழுத்து மாவட்ட வாரியாக, மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வழங்கி வந்தார் ஓபிஎஸ்.

ஏற்காத தேர்தல் ஆணையம்
அதிமுக பொதுக்குழு முடிந்ததுமே, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தது ஈபிஎஸ் தரப்பு. அதேசமயம், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த விவரங்களை ஏற்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். ஈபிஎஸ், பொதுக்குழு உறுப்பினர்களின் பிரமாண பத்திரங்களையும் எலெக்ஷன் கமிஷனில் தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து இரு தரப்பும், பதவி நியமனங்கள் தொடர்பாகவும், பல்வேறு மனுக்களையும், ஆவணங்களையும் தாக்கல் செய்துள்ளனர். ஆனால், தேர்தல் ஆணையம் இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்காமல் இருந்து வந்தது.

மா.செக்கள் கூட்டம்
இந்த நிலையில்தான் இன்று மாவட்டச் செயலாளர் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். 88 மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனிடையே, சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளதாக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அறிவித்துள்ளார்.

பதிவேற்றிய தேர்தல் ஆணையம்
இப்படியான பரபரப்பான சூழலில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்காமல் இருந்து வரும் சூழலில், அதிமுகவின் வரவு - செலவு குறித்து எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த 29.09.2022 தேதியிட்ட, 03.10.2022 அன்று தாக்கல் செய்யப்பட்ட, "Audited Annual Accounts FY 2021-22", தேர்தல் ஆணைய பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதனால், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்து விட்டதா எனும் கேள்வி எழுந்துள்ளது.

ஈபிஎஸ் ஆதரவாளர்கள்
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக கையெழுத்திட்டு, இதை எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்திருக்கிறார். அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டிருக்கிறது எனில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களையும் ஏற்றது என்பதாகத்தானே பொருள் எனக் குறிப்பிட்டிருக்கிறார் ஈபிஎஸ் ஆதரவாளரான கௌரி சங்கர். தேர்தல் ஆணையத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த தகவலை ஈபிஎஸ் ஆதரவாளர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

எடப்பாடிக்கு பச்சைக்கொடி
தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வரவு செலவு அறிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்றால், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து விட்டதா? எனும் கேள்விகள் எழுந்திருக்கின்றன.

ஓபிஎஸ் பின்னடைவு?
ஓபிஎஸ் தரப்பு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தும் சூழலில், இந்தச் செய்தி எடப்பாடி பழனிசாமி தரப்பை உற்சாகமாக்கியுள்ளது. அதேசமயம், இது ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு, பொதுக்குழு தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கிலும் எதிரொலித்தால், எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கும் என்ற சூழல் இருக்கிறது. என்ன நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications