அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கணும்.. ஏன்னா? அமைச்சரிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன வார்த்தை!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட விரும்பியதாக கூறப்படுகிறது.
சென்னை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும்போது நாம் வெல்வதே சிறப்பு என அமைச்சர் முத்துசாமியிடம் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை அமைச்சர் முத்துசாமி, பூத் கமிட்டி நிர்வாகிகளுடனான கூட்டத்தில் தெரிவித்துள்ளாராம்.
அதிமுக சின்னம் முடக்கப்பட்டு நாம் வெற்றி பெறுவது நமக்கு பெருமை இல்லை, இரட்டை இலை சின்னத்தை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வதே நமக்கு பெருமை என ஸ்டாலின் கூறியதாகக் கூறப்படுகிறது.
அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு அணியினர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து இரட்டை இலை சின்னம் எடப்பாடி அணி நியமித்த வேட்பாளருக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இளம் தலைமுறையினருக்கு இலக்கிய ஆர்வத்தை ஊட்டும் புதிய முயற்சி! முதலமைச்சர் ஸ்டாலின் தனிக் கவனம்!
பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல்
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுகவின் சார்பில் வேட்பாளரை நிறுத்த, அவைத் தலைவர் மூலம் பொதுக்குழுவைக் கூட்டி, முடிவு செய்யும்படியும், அதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளரான தென்னரசுவின் பெயருடன் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வேட்பாளர் ஒப்புதல் படிவத்தை அனுப்பியுள்ளார் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன்.
ஈபிஎஸ் - ஓபிஎஸ்
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் சார்பில், செந்தில்முருகன் என்பவர் அறிவிக்கப்பட்டடார். அவர் தனது வேட்பு மனுவையும் தாக்கல் செய்துள்ளார். விரைவில் அவர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
ஓபிஎஸ் முடிவு
இடைத்தேர்தலில் அதிமுக ஒற்றுமையாகப் போட்டியிட வேண்டும், ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கையெழுத்திடத் தயார் என்று நான் அறிவித்தேன். அதற்கேற்ப, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஒற்றுமையாகப் போட்டியிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இரட்டை இலை சின்னத்தின் மூலம் அதிமுக போட்டியிடும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. ஒருங்கிணைப்பாளரான நான் கட்சியிலேயே இல்லை என்று பழனிசாமி தரப்பினர் பகை உணர்வுடன் கூறி வந்தனர். ஆனால், எங்களது தரப்பைச் சேர்ந்தவர்களையும் உள்ளடக்கி, எங்கள் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னர்தான், பொதுக்குழு வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, எங்களை எதிர்த்தவர்களுக்கு சரியான பாடமாக அமைந்துள்ளது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் விருப்பம்
இந்நிலையில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினும், அதிமுக வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதையே விரும்பியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த இடைத்தேர்தலில் வலுவான வேட்பாளரை எதிர்த்து நின்று வெல்வதே சிறப்பு என முதல்வர் ஸ்டாலின் தனது கட்சியினரிடம் பேசியதாகக் கூறப்படுகிறது.
போனில் பேசும் ஸ்டாலின்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்காக திமுக தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது. திமுக அமைச்சர்கள் படையே திரண்டு இளங்கோவனுக்காக தேர்தல் களப்பணி ஆற்றி வருகிறது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் முத்துசாமி, தேர்தல் பணிக்குழுவுக்கு தலைமை தாங்கி பணிகளை கவனித்து வருகிறார்.
அமைச்சர் முத்துசாமி
இந்நிலையில், திமுக பூத் கமிட்டி கூட்டங்களில் பங்கேற்று, கட்சி நிர்வாகிகளுக்கு முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கி வரும் அமைச்சர் முத்துசாமி, முதல்வர் ஸ்டாலின் தன்னிடம் தினமும் போனில் தொடர்பு கொண்டு, தேர்தல் பணிகள் குறித்து விசாரித்து வருவதாகவும், மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் அவர் முன்பு வெற்றியைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார்.
மிதப்பாக இருக்கவேண்டாம்
மேலும், அதிமுக குழப்பத்தில் இருக்கிறது, நமக்கு வெற்றி உறுதிதான் என அசால்ட்டாக பணியாற்றாமல் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்றும், எந்தச் சூழலிலும் தேர்தல் பணியை தொய்வின்றி ஆற்ற வேண்டும், கூட்டணி கட்சியினரோடு இணைந்து செயல்படுங்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் தன்னிடம் அறிவுறுத்தியதாக அமைச்சர் முத்துசாமி பேசியுள்ளாராம்.
இரட்டை இலையை படுதோல்வி அடையச் செய்யவேண்டும்
மேலும், இரட்டை இலை சின்னத்தில் அதிமுக வேட்பாளர் நிற்பதுதான் சரியானது, இரட்டை இலை முடக்கப்பட்டு வேறு சுயேட்சை சின்னத்தில் அதிமுக நின்று நாம் வென்றால், அந்த வெற்றி அவ்வளவு சிறப்பானதாக இருக்காது. செல்வாக்கு மிக்க இரட்டை இலையை படுதோல்வி அடையச் செய்வது தான் ஆளுங்கட்சிக்கு அழகு என முதல்வர் ஸ்டாலின் தன்னிடம் தெரிவித்ததாக அமைச்சர் முத்துசாமி பேசியிருக்கிறாராம்.