அண்ணா அறிவாலயம் வருவதை குறைத்துக் கொண்டாரா ஸ்டாலின்? வருத்தப்படும் அடிமட்ட நிர்வாகிகள்! என்ன விவரம்?
சென்னை: முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வருவதை குறைத்துக் கொண்டதாக திமுக கீழ் மட்ட நிர்வாகிகள் மத்தியில் வருத்தம் இருக்கிறது.
வெளியூர்களில் இருந்து தலைவரை நேரில் சந்தித்து முறையிடலாம் என்ற திட்டத்தோடு சென்னைக்கு வரும் கட்சிக்காரர்கள் பலர் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பும் நிகழ்வுகள் நடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை வன்முறை: கோத்தபாய, மகிந்த ராஜபக்சே வெளிநாடு தப்பி ஓட திட்டம்? தயார் நிலையில் 5 விமானங்கள்?
ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி வெளியூர் நிகழ்ச்சிகள் இல்லாமல் சென்னையில் இருந்தார் என்றால், மாலை 7 மணிக்கெல்லாம் அண்ணா அறிவாலயத்துக்கு ஒரு விசிட் அடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார் கருணாநிதி.
முதல்வர் பொறுப்பு
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் ஓராண்டை நிறைவு செய்துள்ள நிலையில் அதன் கொண்டாட்டங்கள் இன்னும் தொடர்கின்றன. கொரோனா வார்டாக இருந்தாலும் சரி, புயல், மழை, வெள்ளம், என எதுவாக இருந்தாலும் சரி முதல் ஆளாக அங்கு ஆஜராகி பணிகளை முடுக்கிவிடுவதுடன் மற்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு முன் மாதிரியாகவும் திகழ்கிறார் ஸ்டாலின். இந்நிலையில் ஸ்டாலினின் ஓராண்டு ஆட்சி குறித்து திமுக பிரமுகர்கள் சிலரிடம் பேசினோம். அப்போது பலரும் வழக்கம் போல் திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு முதல்வரின் பெருமைகளை சுட்டிக்காட்டிப் பேசினர்.
மனதில் தோன்றியதை
ஓரிருவர் மட்டும் தங்கள் மனதில் தோன்றியதை நம்மிடம் கொட்டினர். அதாவது அண்ணா அறிவாலயத்திற்கு வருவதை முதலமைச்சர் ஸ்டாலின் குறைத்துக் கொண்டதால் தங்களை போன்ற கீழ்மட்ட நிர்வாகிகளால் அவரை முன்பு போல் பார்க்க முடியவில்லை என்றும் அவருக்கு இருக்கும் வேலை பளு இதற்கு காரணமாக இருந்தாலும் கூட வெளியூர்களில் இருந்து தன்னை சந்திக்க வரும் கட்சிக்காரர்களுக்காக ஒரு மணி நேரமாவது இனி வரும் நாட்களில் ஒதுக்கினால் போதும் என வேண்டுகோள் விடுத்தனர்.
அறிவாலயம் வருகிறார்
நாம் இது தொடர்பாக திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவனிடம் பேசினோம், அப்போது அவர் கூறியதாவது; ''தலைவர் தொடர்ந்து அண்ணா அறிவாலயம் வந்து கொண்டு தான் இருக்கிறார். கடந்த ஒரு மாதமாக சட்டமன்றம் நடந்து வருவதால் பேரவையில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் குறிப்புகள் தயார் செய்வது, சட்டசபை விவகாரங்களில் கவனம் செலுத்துவது என இருக்கிறார். போன மாதமெல்லாம் தினமும் அண்ணா அறிவாலயத்துக்கு வந்து ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் இருந்து பார்வையாளர்களை சந்தித்துவிட்டுத் தான் சென்றார்.''
கட்சி விவகாரம்
''இன்னொரு விஷயத்தை நீங்கள் பார்க்க வேண்டும், தலைவர் ஸ்டாலினை பொறுத்தவரை அவர் ஓய்வெடுக்கிறார் என எங்கேயாவது நீங்க கேள்விபட்டதுண்டா. தொடர்ந்து ஓடிக்கொண்டே தான் இருக்கிறார். அந்தளவுக்கு அவருக்கு நிகழ்ச்சிகள் இப்போது உள்ளன. இதனால் அவ்வப்போது அண்ணா அறிவாலயத்திற்கு வர முடியாத சூழல் ஏற்பட்டிருக்கலாம். கடும் அலுவல் பணிகளுக்கு மத்தியிலும் கூட அமைப்புச் செயலாளர் உட்பட முக்கிய நிர்வாகிகளை தினமும் அழைத்து கட்சி விவகாரங்களை தலைவர் நாள்தோறும் அறிந்துகொள்கிறார்.'' என டி.கே.எஸ்.இளங்கோவன் விளக்கம் அளித்தார்.