முதலில் முட்டை வந்ததா? கோழி வந்ததா?.. சரவணன் விஷயத்தில் பாஜகவை கிண்டல் செய்த ப சிதம்பரம்!
சென்னை: மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் பாஜகவில் இருந்து விலகிய விவகாரத்தில் பாஜகவை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார். ‛‛ முட்டை முதலில் வந்ததா, கோழி முதலில் வந்ததா?'' என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை மாநகர் பாஜக தலைவராக செயல்பட்டு வந்தவர் டாக்டர் சரவணன். திமுகவில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏவாக இருந்த இவருக்கு கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்
சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதையடுத்து மதுரை மாநகர் பாஜக தலைவராக செயல்பட்டு வந்தார். கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

அமைச்சர் கார் மீது காலணி வீச்சு
இந்நிலையில் தான் நேற்று இரவு டாக்டர் சரவணன் திடீரென்று பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். வீரமரணம் அடைந்த ராணுவவீரர் லட்சுமணனுக்கு மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தும் விவகாரத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பாஜகவினர் இடையே வார்த்தைபோர் ஏற்பட்டது. இதையடுத்து பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் மீது பாஜகவினர் காலணி வீசப்பட்டது.

பாஜகவில் இருந்து விலகிய சரவணன்
இந்த சம்பவத்தை தொடர்ந்து தான் நேற்று இரவு டாக்டர் சரவணன் , நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது விமான நிலையத்தில் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கோரிய அவர் பாஜகவில் இருந்து விலகுவதாக கூறினார். மேலும் மதஅரசியல் தனக்கு ஒத்துவராது என அவர் கூறினார்.

கட்சியில் இருந்து நீக்கம்
இதன் தொடர்ச்சியாக இன்று காலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டாக்டர் சரவணனை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டார். கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும் கட்சியின் அடிப்டை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார் எனக்கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ப சிதம்பரம் கிண்டல்
இந்நிலையில் தான் டாக்டர் சரவணன் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான ப சிதம்பரம், பாஜகவை கிண்டல் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛பாஜகவில் இருந்து விலகுவதாக டாக்டர் சரவணன் அறிவித்தார். டாக்டர் சரவணனை கட்சியிலிருந்து நீக்குவதாக அண்ணாமலை அறிவித்தார். முட்டை முதலில் வந்ததா, கோழி முதலில் வந்ததா?. வாழ்க சுதந்திரம்!'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications