பாஜக அதிமுக கூட்டணி முறிவை விடுங்க.. இதை எல்லாம் கவனிச்சீங்களா நீங்க?
சென்னை: பாஜக அதிமுக கூட்டணி முறிவு ஒரு பக்கம் இருக்கட்டும்.. சமீப காலமாக அதிமுக தலைமை கழகத்தின் அறிக்கைகளை கவனித்தீர்களா? அதில் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டுள்ள அடைமொழி தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.
அதிமுக பாஜக கூட்டணி முறிவு குறித்து இன்று அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், " தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள, பாஜகவின் மாநிலத் தலைமை, கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு அதிமுக மீதும், எங்களுடைய கட்சியின் தெய்வங்களான பேரறிஞர் அண்ணா, மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியும், எங்கள் கொள்கைகளை விமர்சித்தும் வருகிறது.

மேலும், பாஜகவின் மாநிலத் தலைமை கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க அதிமுக வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறுமைப்படுத்தியும், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தும் எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் 'புரட்சி தமிழர் எடப்பாடி பழனிசாமி ' பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தலைமைக் கழகத்தின் எம்ஜிஆர் மாளிகையில் இன்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்துக்கும், விருப்பத்துக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அதிமுக இன்று முதல் பாஜகவிலிருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்ற ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

வருகின்ற 2024-ல், நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மற்ற கட்சிகளின் கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை கூர்ந்து கவனித்தால், அதில் புரட்சி தமிழர் என்ற பட்டமும் சேர்க்கப்பட்டிருக்கும். இந்த அறிக்கையில் மட்டுமல்ல, அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது தொடர்பாக நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையிலும் புரட்சி தமிழர் பட்டம் இருந்தது.

இதேபோல் கேங்மேன்" பணி வழங்கக் கோரி போராடிய தமிழக இளைஞர்கள் மேல் பதிந்த வழக்குகளை திரும்பப் பெறவும், உடனடியாக பணி நியமன ஆணை வழங்கிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையிலும் புரட்சி தமிழர் பட்டம் போடப்பட்டிருந்தது.
இதேபோல் நேற்று முன்தினம், குறுவை பாசனத்தால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு 35,000/- ரூபாய் வழங்கவும், தென்மேற்குப் பருவமழை பொய்த்த மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று வெளியிடப்பட்டிருந்த அறிக்கையிலும் புரட்சி தமிழர் பட்டம் வழங்கப்படடிருந்தது. அண்மைக்காலமாக அனைத்து அதிமுக அறிக்கையிலும் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி தமிழர் பட்டம் போடப்பட்டிருக்கிறது. இந்த புரட்சி தமிழர் பட்டம் மதுரை அதிமுக மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications