இன்னும் எத்தனை உயிர்களை தின்னப் போகிறது சாதி ஆணவம்.. பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் ஆவேசம்
ஆணவ கொலைகளுக்கு எதிராக பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: "இன்னும் எத்தனை உயிர்களை ஆணவ சாதி தின்னப்போகிறது? இப்போதே முடிவு கட்டுவோம்" என்று சவுக்கடி கேள்வியை கேட்டு சூளுரைத்துள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்!!
பாகலூரை சேர்ந்த ஸ்வாதி - நந்தீஷ் என்ற இளம் தம்பதியினரின் அழுகிய உடல்கள் நேற்று கைப்பற்றப்பட்டதை அடுத்து தமிழகமே சூடாகிவிட்டது.
ஸ்வாதி வன்னியர் சமூகம்.. நந்தீஷ் ஆதி திராவிடர் சமூகம்... இருவரும் காதலித்தார்கள்.. வீட்டை விட்டு ஓடிபோய் கோயிலில் தாலி கட்டி கல்யாணம் பண்ணி கொண்டார்கள்.. முறைப்படி பதிவும் செய்து விட்டார்கள். எங்கோ நிம்மதியாக ஒரு மரக்கடையில் வேலை பார்த்து கொண்டிருந்தவர்களை சாதி வெறி துரத்தி தேடி கண்டுபிடித்து விட்டது.
3 பேர் கைது
ஜவுளிக்கடைக்கு துணி எடுக்கிறேன் என்று போனவர்கள்தான் இந்த ஜோடி... எங்கே போனார்கள்... என்ன ஆனார்கள் என தெரியாமல், தேடி தேடி பார்த்து, கடைசியில் பிணமாக அதுவும் அழுகிய நிலையில்தான் கிடைத்தார்கள். ஓசூரில் கடத்தி கர்நாடகாவின் மாண்டியாவில் வைத்து கொலை செய்ய வைத்தது சாதியின் நீண்ட நெடி! இதில் 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை போய் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
தலித் அரசியல்
இந்த நிலையில் விசாரணை முடிந்து குற்றவாளியை சிறைக்குள் தள்ளிவிடுவதற்குள் அடுத்த ஆணவ கொலை நடக்காது என்பது நிச்சயமா என்ன? இதுபோன்ற ஆணவ கொலைக்கு பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார். 'அட்டக்கத்தி', 'மெட்ராஸ்', 'கபாலி', 'காலா' போன்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் ரஞ்சித். இவர் தனது படங்கள் மூலம் தலித் அரசியலை முன்வைத்து பலரது பாராட்டுகளை தொடர்ந்து பெற்று வருகிறார். தனது ட்விட்டரில் ரஞ்சித் தெரிவித்துள்ளதாவது:
|
வாருங்கள் நீதி கேட்போம்
"இதோ நிகழ்ந்தேறிவிட்டது இன்னுமொரு கொடுந்துயர சாதி ஆணவ படுகொலை... வாய் பேச முடியாத காளைகள் எங்கள் குடும்பத்தில் ஒன்று என போராடிய தமிழ் போராளி தோழமைகளே!!! வாய் பேச முடிந்த #நந்தீஸ்-சுவாதி இவர்களை கொன்ற சாதி திமிருக்கு எதிராக திரள்வோம்!! வாருங்கள் நீதி கேட்போம்!!
தயவு செய்து தமிழக ஊடகங்களிடம் மன்றாடி கேட்டு கொள்கிறோம்... துடைத்து அப்புறப்படுத்த வேண்டிய சாதி கேவலத்துக்கு எதிராக முழுவீச்சில் வினையாற்றுவோம்.
|
முடிவு கட்டுவோம்
இன்னும் எத்தனை உயிர்களை ஆணவ சாதி தின்னப்போகிறது? இந்த கொடுந்துயருக்கு இப்போதே முடிவு கட்டுவோம்!!! #சாதிக்கு_முடிவு_கட்டுவோம் திரையுலக மற்றும் முற்போக்கு எண்ணம் கொண்ட தோழமைகளே!! விழித்துகொள்வோம்!இன்னும் இன்னும் நம் குடும்பங்கள், நம் தெருக்கள், நம் ஊர்கள், நகரங்கள், நம் நாடு என, எல்லா இடங்களிலும் நீக்கமற இருக்கும் இந்த நூற்றாண்டின் கொடூரம் இழிவு, இந்த சாதி திமிருக்கு எதிராக திரள்வோம்!!!"
இவ்வாறு ரஞ்சித் தனது ட்விட்டரில் கோபத்தையும், ஆத்திரத்தையும் வெளிப்படுத்தி உள்ளதுடன், சாதிக்கு எதிராக அனைவரையும் திரளுமாறு சூளுரைத்துள்ளார்.
|
ஆதங்கத்தை கொட்டினர்
இதேபோல டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில் , "கொடூரத்தின் உச்சம். ராஜலட்சுமி, நந்தீஷ் - சுவாதி என எத்தனை ஆண்டுகளானாலும் மனிதத்தன்மையற்ற சாதிய காட்டுமிராண்டித்தனம் ஒழிக்கப்படவில்லை. நாம் அனைவரும் இணைந்து சாதியை ஒழிக்கப் பாடுபட வேண்டும். சாதியம் ஒழிக்கப்பட வேண்டும்" என்று தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.
சூடாக்கி உள்ளது
இந்த 2 இளம் இயக்குனர்கள் ரத்தம் கொதித்து போய் பதிவேற்றப்பட்டுள்ள இந்த ட்வீட்கள்தான் தமிழ் சினிமா உலகை மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் வைரலாகி வருகிறது!!