புது குழப்பம்.. தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் இடைத் தேர்தலில் போட்டியிட முடியாதா?
சென்னை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வார்களா, அல்லது இடைத்தேர்தலை சந்திப்பார்களா என்று வினா எழுந்துள்ள நிலையில் புதிதாக ஒரு குழப்பம் முன்னாள் மேயர் சைதை துரைசாமியால் கிளம்பியுள்ளது.
தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்தது சரிதான் என்று சென்னை, உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் இன்று தீர்ப்பு வழங்கினார்.
இதையடுத்து மேல்முறையீடு செய்வதா அல்லது இடைத் தேர்தலை சந்திப்பது என்பது குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவை அறிவிப்பதாக தினகரன் அளித்த பேட்டியில் கூறினார்.
சைதை துரைசாமி
ஆனால் டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் சென்னை மேயருமான சைதை துரைசாமி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்த 18 பேரும் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழப்பதால் அவர்களால் இடைத்தேர்தலில் போட்டியிட முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இவர்களால் தேர்தலில் போட்டியிட முடியாது என்று அவர் அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார்.
ஊழல் வழக்கில்தான்
இந்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது குறித்து சட்ட வல்லுனர்கள் சிலரிடம் கேட்டோம். அவர்கள் நம்மிடம் கூறியது இதுதான்: ஊழல் தடுப்பு சட்டத்தில் தண்டனை பெற்றவர்கள்தான் ஆறு ஆண்டுகளுக்கு எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிட முடியாது. ஆனால், கட்சி தாவலுக்காக, சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள், உடனடியாக இடைத்தேர்தலில் கூட போட்டியிடலாம் என்று ஆணித்தரமாகக் கூறுகிறார்கள்.
போட்டியிடலாம்
தினகரன் தரப்பு மூத்த வழக்கறிஞரான ராஜா செந்தூர் பாண்டியன் இதே கருத்தைத்தான் பிரதிபலித்தார். அவர் கூறுகையில் தகுதி நீக்கப்பட்ட 18 எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியும். அல்லது இடைத் தேர்தலிலும் போட்டியிடலாம், அல்லது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கொண்டே தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு உள்ளது. இவ்வாறான மூன்று வாய்ப்புகள் அவருக்கு உள்ளது என்பதை ராஜா செந்தூர் பாண்டியன் உறுதிபட தெரிவித்தார்.
வதந்தி
எனவே, 18 தகுதி நீக்கம் இடை தேர்தலில் போட்டியிட முடியாது என்பது வெறும் வதந்திதான். தினகரன் தரப்பினரை குழப்ப, சைதை துரைசாமி இதுபோல கூறி இருக்கலாம், அல்லது அறியாமல் கூறியிருக்கலாம், என்ற கருத்து அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது.