பிரிவினைவாதம் தலைவிரித்து ஆடுது.. கலைகளின் வழியே சமத்துவம் பரப்புவோம் - இயக்குநர் பா.ரஞ்சித்
சென்னை: பிரிவினைவாதம் தலைவிரித்தாடும் இந்த காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் கலைகளின் வாயிலாக அன்பையும் சமத்துவத்தையும் பரப்ப வேண்டும் என இயக்குநர் பா.ரஞ்சித் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஐ.சி.எப். அரங்கில் நடைபெற்ற விழா ஒன்றில் பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக கல்லூரி காலங்களில் நாடகங்களை நான் நடத்தி உள்ளேன்.
ஆளுநர் செய்தது தவறு.. இது தமிழ்நாடு மக்களுக்கு எதிரான முடிவு.. இயக்குனர் பா.ரஞ்சித் கடும் விமர்சனம்!
பிரிவினைவாதம்
சினிமாவை போன்றே எனக்கு நாடகங்களையும் பிடிக்கும். நாட்டில் பிரிவினைவாதம் என்பது தலைவிரித்து ஆடுகிறது. இந்த காலகட்டத்தில் நாம் மனிதநேயத்தையும் சமத்துவத்தையும் கலைகளின் வாயிலாக பரப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். சினிமா, நாடகங்கள், பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள் என என்னென்ன கலைகள் உள்ளதோ அனைத்தின் மூலமாகவும் அன்பை திளைக்க செய்ய வேண்டும்.
கலைகளின் மூலம் பேசுவோம்
கலைகளின் மூலமாக மக்கள் மத்தியில் நம்மால் முடிந்ததை பேச வேண்டும். நீலம் பண்பாட்டு மையம் மக்களிடம் தொடர்ந்து சமூகத்தில் இருக்கும் முரண்கள் குறித்து பேசி வருகிறது. குறைந்தபட்ச அரசியல் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது. மனித மாண்பை மீட்டெடுக்க நாம் தொடர்ந்து செயல்படுவோம் என்றார்.
இயக்குநர் பா.ரஞ்சித்
அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இயக்குநர் பா.ரஞ்சித், அதன் வெற்றியை தொடர்ந்து மெட்ராஸ் படத்தை இயக்கினர். சமூக ஏற்றத்தாழ்வுகளையும், சென்னையின் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் பேசும் இந்த திரைப்படங்கள் பெற்ற பிரமாண்ட வெற்றியால் ரஜினியை வைத்து காலா, கபாலி ஆகிய படங்களை இயக்கி அதிலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தார்.
தயாரிப்பாளர் பா.ரஞ்சித்
அதன்பின்னர் ஆர்யாவை வைத்து அவர் இயக்கிய சார்பட்டா திரைப்படம் ஓடிடியில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. இயக்குநராக மட்டுமின்றி சமூக அக்கறை கொண்ட படங்களையும் நீலம் பண்பாட்டு மையம் மூலமாக தயாரித்து வருகிறார் பா.ரஞ்சித். பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர் போன்ற படங்களை அவர் தயாரித்துள்ளார்.
Recommended Video
நீலம் பண்பாட்டு மையம்
நீலம் பண்பாட்டு மையம் மூலமாக மார்கழியின் மக்களிசை, கேஸ்ட்லஸ் கலெக்டிவ் போன்றவற்றைம் நடத்தி வரும் ரஞ்சித், சமூக, அரசியல் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்த ஏப்ரல் மாதம் முழுவதும் தலித் வரலாற்று மாத நிகழ்வாக பி.கே.ரோசி திரைப்பட விழா, புத்தக கண்காட்சி, மேடை நாடகங்கள் என பல்வேறு நிகழ்வுகளை பா.ரஞ்சித் நீலம் பண்பாட்டு மையம் மூலமாக நடத்தி வருகிறார்.