லோக்சபா தேர்தல் கூட்டணி.. விஜயகாந்த் முடிவு செய்ய அதிகாரம்.. தேமுதிக பொதுக்குழுவின் தீர்மானம்
சென்னை: லோக்சபா தேர்தல் கூட்டணி முடிவுகளை எடுக்க விஜயகாந்துக்கு முழு அதிகாரம் உள்ளது என்று தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேமுதிவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவேற்காடு ஜிபிஎன் பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று காலை தொடங்கியது. உடல்நலப் பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள விஜயகாந்த் கூட்டத்தில் பங்கேற்றார். மிகவும் உடல் தளர்ந்த நிலையில், சக்கர நாற்காலியில் கூட்டத்திற்கு விஜயகாந்த் அழைத்து வரப்பட்டார்.

பொதுக்குழுக் கூட்டத்துக்கு வருகை தந்த விஜயகாந்துக்கு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆரவாரமாக கூச்சலிட்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் பார்த்தசாரதி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்யப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேமுதிகவின் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டதும், பிரேமலதா விஜயகாந்த் காலில் விழுந்து ஆசி பெற்றார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் மலர்மாலை அணிவித்தனர். இதனையடுத்து தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரேமலதா, கட்சியின் கடைக்கோடி தொண்டர்கள் வரை ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
உடல் நலக்குறைவு காரணமாக கட்சியின் நிறுவன தலைவராக மட்டுமே விஜயகாந்த் தொடர்கிறார். கடந்த சில ஆண்டுகாலமாகவே உடல்நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் பொதுக் கூட்டங்களில் பேச முடியாத நிலையில் உள்ளார். கையை உயர்த்தி மட்டும் காட்டுவார். கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தேமுதிகவுக்காக பிரச்சாரம் மேற்கொண்ட பிரேமலதா, கடந்த 2018ஆம் ஆண்டில் கட்சியின் பொருளாளர் ஆனார்.
2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது தேமுதிக. தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து பேசினார் விஜயகாந்த். மிகப்பெரிய வெற்றி பெற்றது தேமுதிக. எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக சட்டசபையில் அமர்ந்தார். சட்டசபையில் ஜெயலலிதாவிற்கு எதிராக பேசியதால் அதிமுக தேமுதிக கூட்டணி முறிந்தது.
திமுக, அதிமுகவிற்கு பின் தமிழ்நாட்டில் மூன்றாவது அணியாக உருவெடுத்த தேமுதிக கட்சி, அதன்பிறகு மெல்ல மெல்ல காணாமல் போக தொடங்கியது. கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளாராக அறிவித்து தனித்து கூட்டணி அமைத்து போட்டியிட்டனர் அனைவருமே டெபாசிட்டை பறிகொடுத்தனர். தொடர்ந்து, தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவரால் சரிவர பேசமுடியாத நிலை ஏற்பட்டதில் இருந்து அவரது மனைவியும் தேமுதிகவின் பொருளாளருமாக இருந்த பிரேமலதாவே கட்சியை நடத்தி வந்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தல் பிரச்சாரங்களில் விஜயகாந்தின் முகத்தை காட்டி, அவர் கையசைப்பதை மட்டுமே வைத்து வாக்கு சேகரித்து வந்தார் பிரேமலதா. கொரோனா கால கட்டத்திற்கு பிறகு விஜயகாந்தின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவரது முகத் தோற்றமும் மாறத் தொடங்கியது. 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தேமுதிக அதிமுக கூட்டணி இணைந்தது. தொகுதி பங்கீடு பிரச்சினையால் பிரிவினை ஏற்பட்டு அமமுக உடன் இணைந்து தனி கூட்டணி அமைத்து போட்டியிட்டது தேமுதிக.
லோக்சபா தேர்தல் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே, இண்டியா கூட்டணியும் தேசிய ஜனநாயக கூட்டணியும் தேமுதிகவை புறக்கணித்துள்ளன. யாருடன் கூட்டணி என்று இதுவரை தேமுதிகவும் அறிவிக்கவில்லை. கட்சிக்கு புத்துயிர் ஊட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும் இந்த சூழ்நிலையில் திடீர் உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த்.
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் தற்போது உடல் நலமடைந்து வீடு திரும்பினார். முதன் முறையாக கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றார். தேமுதிகவின் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். தீர்மானம் நிறைவேற்றப்பட்ட உடன் விஜயகாந்திடம் ஆசி பெற்று மேடையில் பேசினார்.
பிரேமலதா விஜயகாந்த் பொதுச்செயலாளர் என்று அறிவிக்கப்பட்டவுடன், தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் ஒரு சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, 'வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் தலைமையில் கழக தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடனும், முழுவேகத்துடனும் பணியாற்றிட இந்த பொதுக்குழு உறுதிகொள்கிறது.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைப்பது பற்றியும், தேர்தல் யுத்திகளை வழிவகுக்கவும் தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு முழு அதிகாரம் வழங்கி தேமுதிக பொதுக்குழு இத்தீர்மானத்தை நிறைவேற்றுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications