தலைமைச் செயலாளர் இறையன்புவை பாராட்டி தள்ளிய கேப்டன் விஜயகாந்த்.. கையோடு அரசுக்கும் வைத்த கோரிக்கை!
சென்னை: தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு சில நாட்களுக்கு முன்பு அரசு அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தார். தமிழகத்தில் தற்போது பணியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது சொத்து விவரங்களையும், தங்கள் குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்களையும் 2022-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர் கூறி இருந்தார்.
இந்த உத்தரவை மீறும் பட்சத்தில் அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இறையன்பு கூறி இருந்தார். இறையன்புவின் இந்த உத்தரவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தின் அனைத்து அரசு உயரதிகாரிகளும், தங்களது சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தில் பணியில் உள்ள அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகள், தாங்கள் வாங்கிய அசையா சொத்துகள் மற்றும் அவர்களது உறவினர் பெயர்களில் வாங்கிய சொத்துகள் விவரங்களை வருகிற ஜனவரி 31ஆம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் எனத் தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளது வரவேற்கதக்கது.
இதுபோன்ற செயல் வெளிப்படைத் தன்மையையும், ஊழல் இல்லாத நிர்வாகத்தையும், கொண்டுசெல்ல வழிவகுக்கும். ஐஏஎஸ் அதிகாரிகள் என்பவர்கள் நாட்டை வழிநடத்தும் உயர்ந்த பதவிகளில் பணியாற்றுகிறார்கள், அவர்களே வெளிப்படைத் தன்மையோடு தங்களை அடையாளபடுத்திக் கொண்டால், அவர்களுக்குக் கீழ் செயல்படும் மற்ற அதிகாரிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமையும்.
இந்த நடைமுறையை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், அனைத்து அரசு உயரதிகாரிகளும், தங்களது சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இதுபோன்ற ஓர் அறிவிப்பை வெளியிட்ட தலைமைச் செயலாளர் இறையன்புவிற்கு தேமுதிக சார்பில் நன்றி. இந்த நடைமுறை பெயரளவிற்கு இல்லாமல் இதில் விடா முயற்சியுடன், கண்டிப்புடன் செயல்பட்டால் வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகம் அமைவதில் ஐயம் இல்லை. இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications