மத்தளத்துக்கு 2 பக்கமும் இடி என்பதுபோல இருக்கு சென்னை மக்கள் நிலைமை.. விஜயகாந்த் கவலை!
சென்னை : உரலுக்கு ஒரு பக்கம் இடி என்றால் மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல் தற்போது பெய்து வரும் கனமழையால் சென்னை நகர மக்கள் அவதி அடைந்து வருகின்றனர் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை மக்களின் பிரச்சனைகளை தீர்க்க, தேங்கியுள்ள மழைநீரை அகற்ற தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் ஒரு நாள் மழைக்கே சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது என்றும் விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, முதலமைச்சர் தொகுதியான சென்னை கொளத்தூரில் வீடுகளில் மழை நீர் புகுந்ததால் விடிய விடிய தூங்காமல் மக்கள் தவித்தனர் என்றும் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
மேட்சிங் உடையில் குடும்பத்தோடு தீபாவளியை கொண்டாடிய விஜயகாந்த்.. மெய்சிலிர்த்த ரசிகர்கள்
கனமழையால் அவலம்
தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையாத இடங்களிலும், வடிகால் இல்லாத பகுதிகளிலும் ஆங்காங்கே வெள்ளக்காடாக் காட்சி அளித்து வருகிறது. தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்வர் தொகுதியில்
இந்நிலையில், சென்னை மழை சேதம் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. ஒருநாள் மழைக்கே சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. குறிப்பாக முதலமைச்சர் தொகுதியான சென்னை கொளத்தூரில் வீடுகளில் மழை நீர் புகுந்ததால் விடிய விடிய தூங்காமல் மக்கள் தவித்தனர், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புதுந்துள்ளதால் வீடுகளைவிட்டு வெளியேற முடியாமல் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
ஆமை வேகம்
சென்னையில் ஒருபுறம் சென்னை மெட்ரோ, மறுபுறம் மழைநீர் வடிகால் பணிகள் என ஏற்கனவே சென்னை மாநகரம் முழுவதும் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மழைநீர் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் மழைநீர் வெளியேற முடியாமல் சாலைகளில் பாய்ந்து ஓடுகிறது.
ரெண்டு பக்கமும் இடி
உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல தற்போது பெய்து வரும் மழையால் சென்னை மாநகர மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். சென்னை மக்களின் பிரச்சனைகளை தீர்க்கவும், மழை நீரை அகற்றவும் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீர் வடியாத இடங்களில் ராட்சத மோட்டார்கள் மூலம் மழைநீரை அகற்ற தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.