மார்க்ஸ் சிலை திறப்பு.. காய் நகர்த்திய ஸ்டாலின்.. வைகோ, செல்வப்பெருந்தகையுடன் ரகசியமாக பேசிய எவ வேலு
சென்னை: சென்னை கன்னிமாரா நூலக வளாகத்தில் மாமேதை கார்ல் மார்க்ஸின் பிரம்மாண்ட வெண்கலச் சிலை திறப்பு விழாவின் போதும், திரை மறைவில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. இந்த விழாவில் முக்கிய கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றிருந்த சூழலில், அவர்களுடன் அமைச்சர் எ.வ.வேலு பேசிக் கொண்டே இருந்தது பல்வேறு கணிப்புகளை உருவாக்கி இருக்கிறது.
சென்னை கன்னிமாரா நூலக வளாகத்தில் மாமேதை கார்ல் மார்க்ஸின் பிரம்மாண்ட வெண்கலச் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். 2025ஆம் ஆண்டு சட்டசபையில் 110 விதிகளின் கீழ் கார்ல் மார்ஸ்க்கு சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்புக்கு பின் இந்த சிலை ரூ.85 லட்சம் செலவில் விரைவாக அமைக்கப்பட்டுள்ளது.

கூட்டணி கட்சித் தலைவர்கள்
இந்த சிலை திறப்பு விழாவில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், முன்னாள் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.
கருத்தியல் கூட்டணி
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக தரப்பில் இன்னும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கப்படவே இல்லை. இதற்கான குழுவை திமுக விரைவில் அறிவிக்க வேண்டும் என்று பலரும் கோரி வருகின்றனர். இந்த நிலையில் கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி வெறும் நிகழ்ச்சியாக அல்லாமல், திமுக கூட்டணியை உறுதி செய்யும் வகையில் அமைந்திருக்கிறது.
எவ வேலு ரகசிய பேச்சு
இது வெறும் தேர்தல் அரசியல் கூட்டணி என்றில்லாமல், கருத்தியல் கூட்டணி என்பதை காட்டி இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் அமைச்சர் எ.வ.வேலு கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் திரை மறைவில் பேசிக் கொண்டே இருந்தார். ஏற்கனவே ஒவ்வொரு கட்சியுடனும் தனித்தனியாக திமுக சீனியர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். வைகோ, செல்வப்பெருந்தகையுடன் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பே பேசினார்.
திமுக எடுத்த முடிவு
இந்த முறை விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டு வருகின்றன. அதேபோல் வைகோ சொந்த சின்னத்தில் நிற்கப் போவதாக கூறி வருகிறார். இதனால் தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தையை விரைவில் இறுதி செய்ய திமுக முடிவு செய்திருக்கிறது. அதற்கான முதற்கட்டமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.
செல்வப்பெருந்தகை - ஸ்டாலின் பேச்சு
அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் - திமுக இடையில் சிறிய மோதல் இருந்து வருகிறது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையுடன் முதல்வர் ஸ்டாலின் சில நிமிடங்கள் பேசிக் கொண்டே இருந்தார். இதனால் விரைவில் திமுக - காங்கிரஸ் கூட்டணியும் இறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications