வர்லாம் வர்லாம்.. ஓப்பனாக சிக்னல் கொடுத்த மாஜி! திமுக கூட்டணி கட்சிகளுக்கு வலை வீசும் எடப்பாடி டீம்!
சென்னை : 2024 லோக்சபா தேர்தலுக்காக இப்போதே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில், தேர்தல் கூட்டணி அமைக்க, திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி.
அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்த நிலையில், டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்த்துக்கொள்ள ஒரு சதவிகிதம் கூட வாய்ப்பு இல்லை என ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.
மெகா கூட்டணி எனச் சொல்லும் அதே சமயத்தில் கூட்டணி பேச்சையும் எடப்பாடி பழனிசாமி தட்டிவிட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஈபிஎஸ் அணியின் ஜெயக்குமார், கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கூட்டணி திட்டம்
வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் கணிசமான எம்.பிக்களைப் பெற வேண்டும் என்ற திட்டத்துடன், தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ளது பாஜக. தமிழக பாஜகவினர், வலுவான பூத் கமிட்டிகளை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, மெகா கூட்டணி அமைப்பதற்காக கூட்டணி கட்சிகளுடன் பாஜகவின் முக்கிய தலைவர்கள் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. ஓபிஎஸ், ஈபிஎஸ் ஒன்றிணைந்த அதிமுக தலைமையில் பல கட்சிகள் இணைந்த கூட்டணியை அமைக்க பாஜக திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

மெகா கூட்டணி
எடப்பாடி பழனிசாமியும் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் எனத் தெரிவித்தார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக தலைமையான கூட்டணியில் இணையத் தயார் என வெளிப்படையாகவே கூறிய நிலையில், டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்க்க வாய்ப்பே இல்லை என்று உறுதிபடத் தெரிவித்து விட்டார் எடப்பாடி பழனிசாமி. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான மெகா கூட்டணி அமைவது உறுதி. ஆனால் அந்த மெகா கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு 1% கூட இடம் கிடையாது என்று கூறியுள்ளார் ஈபிஎஸ்.

விவாதம்
ஓபிஎஸ், டிடிவி தினகரன் இருவரையும் சேர்க்க மாட்டேன் என எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக இருந்து வரும் நிலையில், பிறகு எப்படி மெகா கூட்டணியை அமைப்பார் எடப்பாடி பழனிசாமி என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. பாமகவும், அதிமுக கூட்டணியில் இணைய விருப்பம் இல்லாதது போல் காணப்படும் நிலையால், எடப்பாடி பழனிசாமி அணியுடன் கூட்டணி அமைக்க எந்தெந்தக் கட்சிகள் தயார் நிலையில் உள்ளன என்பது பற்றி அரசியல் அரங்கில் பெரிய விவாதமே நடக்கிறது.

கூட்டணியில் இருந்து வெளியேறுவாரா
எடப்பாடி பழனிசாமி, கூட்டணி விவகாரத்தில் டிடிவி தினகரனை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்திருப்பது பலருக்கும் அதிர்ச்சி தான். இத்தனைக்கும், டிடிவி தினகரனை கூட்டணியில் இணைப்பது டெல்லி பாஜகவின் திட்டம் என்றே கூறப்படுகிறது. அதனை எடப்பாடி பழனிசாமி மறுதலித்துள்ளதால், பாஜக கூட்டணியில் இருந்தும் எடப்பாடி பழனிசாமி வெளியேறும் முடிவை எடுப்பாரா என உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.

கூட்டணிக்கு அழைப்பு
இந்நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் தலைமையை ஏற்றுக் கொள்ளும் கட்சிகள், ஏன் இப்போது திமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட எங்களுடன் வரலாம். இப்போது திமுகவுடன் கூட்டணியில் உள்ளவர்கள் திமுகவுடன் ஒன்றியுள்ளனரா என்றால் கிடையாது. அவர்களும் திமுக மீது வெறுப்பில் தான் உள்ளனர் என அவர் நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்துள்ளார்.

கட்சிகளுக்கு சிக்னல்
காங்கிரஸ் கட்சியுடன், தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் மூலம் எடப்பாடி பழனிசாமி பேசி வருவதாக சில வாரங்களுக்கு முன்னர் கூறப்பட்டது. விசிக உள்ளிட்ட கட்சிகளையும் கூட்டணிக்கு கொண்டு வர எடப்பாடி விரும்புவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் எங்கள் கூட்டணிக்கு வரலாம் என ஓப்பனாக அழைப்பு விடுத்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனைக்குப் பிறகே ஜெயக்குமார் இப்படியாக பொதுவெளியில் சிக்னல் காட்டியிருக்கலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications