மனைவியின் திருமாங்கல்யத்தில் கூட உதயசூரியன் சின்னம்தான்.. பொங்கும் தொண்டர்கள்!
சென்னை: நான் திமுகவின் பயங்கர விசுவாசி, எனது மனைவியின் திருமாங்கல்யத்தில் கூட உதயசூரியன் சின்னம்தான் என்றும் விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளர் பிரபாகர் ராஜாவை மாற்ற வேண்டும் என்றும் திமுக பிரமுகர் தனசேகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
திமுக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை நேற்றைய தினம் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். இதில் சில தொகுதிகளுக்கு சிலரை வேட்பாளர்களாக அறிவித்ததால் தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள்.
அந்த வகையில் விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளராக பிரபாகரர் ராஜாவை அறிவித்துள்ளதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் பலர் ஸ்டாலினின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
திமுக
இந்த நிலையில் விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளராக பிரபாகர் ராஜாவை அறிவித்துள்ளதை எதிர்த்து திமுக தலைமை செயற்குழு தலைவர் தனசேகரன் தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார். அங்கு திமுகவிலிருந்து தாங்கள் விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்தார்.
மறுபரிசீலனை
இதுகுறித்து தனசேகரன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் விருகம்பாக்கம் தொகுதிக்கு பிரபாகர் ராஜாவை வேட்பாளராக அறிவித்துள்ளதை திமுக தலைவர் ஸ்டாலின் மறு பரிசீலனை செய்ய வேண்டும். அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அவர் என்னை கை விடமாட்டார் என நம்புகிறேன்.
பொறுப்பு
பிரபாகர்ராஜாவை ஏன் எதிர்க்கிறோம் என்றால் அவர் அதிமுகவுடன் நெருங்கி பழகக் கூடியவர். அதனால் என்ன என நீங்கள் கேட்கலாம். தனது இல்லத்திருமண விழாவிற்கு அதிமுகவினர் ஏராளமானோரை அழைத்திருந்தார். திமுகவில் எனது குடும்பத்தினர் ஏராளமான பொறுப்புகளை வகித்து வருகிறார்கள்.
உதயசூரியன்
நாங்கள் திமுகவின் விசுவாசிகள். எனது மனைவி அணிந்திருக்கும் தாலியில் கூட உதயசூரியன் சின்னம்தான் பொறித்திருக்கிறேன். எனவே பிரபாகர் ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அமைப்பு செயலாளரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளேன். அவரும் எனது கோரிக்கைக்கு பரிசீலனை செய்வதாக தெரிவித்தார். பார்ப்போம் என்ன நடக்கிறது என்பதை!