ஐ-பேக் கொடுத்த "டாப் 3.." மா.செ.க்களிடம் ஸ்டாலின் கிடுக்கிப்பிடி.. திமுக வேட்பாளர் தேர்வு வேற லெவல்
சென்னை: வழக்கத்தைவிட இந்த முறை திமுக வேட்பாளர் தேர்வு மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்கிறார்கள் அக்கட்சி வட்டாரத்தில்.
திமுக மீது கருணாநிதி காலத்திலிருந்து எப்போதுமே வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு, வாரிசு அரசியல் அங்கு தலைவிரித்து ஆடுகிறது என்பதுதான்.
திமுக தலைமையின் குடும்ப வாரிசுகள் மட்டுமல்லாது, மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் என பல முக்கிய பிரமுகர்களின் வாரிசுகளும் அதிகாரத்தில் பங்கெடுக்கிறார்கள் என்பது அதிமுக தலைவர்களின் தொடர் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
ஐ பேக் பங்களிப்பு
இந்த முறை வேட்பாளர் தேர்வில் அப்படியான பழைய ஃபார்முலா இருக்காது என்று அடித்துக் கூறுகிறது அறிவாலய வட்டாரம். இதற்கு முக்கிய காரணம் வேட்பாளர் தேர்வில் ஐ-பேக் பங்களிப்பு அதிகமாக இருப்பதுதான். பொதுவாகவே வேட்பாளர் தேர்வில் மாவட்ட செயலாளர்கள் பங்களிப்புதான் அதிகமாக இருக்கும். அவர்கள் கொடுக்கக்கூடிய பட்டியலை டிக் அடிப்பது திமுக தலைமையின் பணியாக இருந்துவந்தது. வேட்பாளர் நேர்காணல் என்பது பெரும்பாலும் ஒரு கண்துடைப்பாகத்தான் இருக்கும். சில நேரங்களில் மட்டும்தான் மாவட்டச் செயலாளர்களையும் மீறி தலைமையின் கண் பார்வைபட்டு வேட்பாளராக தேர்வாக முடியும்.
டாப் 3 வேட்பாளர்கள்
இந்த முறை அப்படி கிடையாது. பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் ஒவ்வொரு தொகுதியிலும் தீவிர ஆய்வு செய்து, ஒரு பட்டியலை திமுக தலைமையிடம் வழங்கியுள்ளது. ஆம்.. அந்த பட்டியலில் டாப் 3 வேட்பாளர்கள் பட்டியல் தரப்பட்டுள்ளது. அந்த மூன்றில் யாரை வேண்டுமானாலும் திமுக தலைமை தேர்ந்தெடுத்துக் கொண்டால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று அடித்துச் சொல்கிறது, ஐ-பேக்.
மாவட்டச் செயலாளர்கள்
வெறுமனே இந்த பட்டியலை வைத்து மட்டும் ஸ்டாலின் முடிவு எடுக்கப் போவது கிடையாது. மாவட்ட செயலாளர்களிடமும் வழக்கம்போல ஒரு பட்டியலை தருமாறு கேட்டுள்ளார் அவர். அவர்கள் கொடுத்த பட்டியல் மற்றும் ஐ-பேக் நிறுவனம் கொடுத்த பட்டியல் ஆகிய இரண்டையும் ஒப்பீடு செய்து இரண்டும் பொருந்திப் போகக் கூடிய வேட்பாளர்களை திமுக சார்பில் களம் இறக்கப் போகிறார் ஸ்டாலின் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.
மமதா கட்சியில் 27 சிட்டிங் எம்எல்ஏக்கள்
மேற்கு வங்காளத்தில், 27 சிட்டிங் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு மமதா பானர்ஜி சீட் தரவில்லை. இதற்கு காரணம் ஐ-பேக் நிறுவனம் அவர்களுக்கு சீட் தர வேண்டாம் என்று பரிந்துரை செய்ததுதான். அதை அப்படியே ஏற்று மமதா பானர்ஜி செயல்படுத்தி உள்ளார். தமிழகத்திலும் இப்படி எத்தனை பேருக்கு சீட்டு கிடைக்காமல் போக போகிறதோ என்ற அச்சம் திமுக வட்டாரத்தில் உள்ள முக்கிய புள்ளிகள் இடம் எழுந்துள்ளது.
ஸ்டாலின் உறஉதி
அதேநேரம், மமதா பாணியில் அப்படியே வேட்பாளர் தேர்வு இருக்கப் போவது கிடையாது. தமிழக அரசியல் சூழ்நிலைக்கு அது பொருந்தாது என்பதில் ஸ்டாலின் தெளிவாக இருக்கிறார். எனவே திமுக மாவட்ட செயலாளர்களிடமும் கலந்துபேசி முடிவு எடுக்கிறார். ஐ-பேக் லிஸ்டில் இருக்கும் வேட்பாளர்களை பரிந்துரை செய்யாத மா.செக்களிடம் குறுக்கு விசாரணை செய்து ஏன் என்று கேள்வி எழுப்புகிறார் ஸ்டாலின். கருணாநிதி காலத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் பேசி கடைசி நேரத்தில் வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்த உடன்பிறப்புகள் பலர் உண்டு. ஆனால் இந்த முறை அது கண்டிப்பாக நடக்க போவது கிடையாது.
3 சுற்றுகள்
இந்த முறை திமுக வேட்பாளர் தேர்வில் பார்த்த முகங்களையே பார்ப்பது.. வாரிசுகளையே பார்ப்பது என்ற சலிப்பு இருக்கப் போவது கிடையாது. ஐ-பேக் நிறுவனம், மாவட்ட செயலாளர்கள் பரிந்துரை மற்றும் இரு லிஸ்டையும் வைத்து ஸ்டாலின் நடத்தும் நேரடி விசாரணை, ஆகிய, 3 சுற்று ஃபில்டர் செய்யப்பட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட போகிறார்கள். எனவே, திமுகவில் புது ரத்தம் பாய்ச்சப்பட்ட போகிறது என்று அடித்து சொல்கிறது அறிவாலய வட்டாரம்.