போதும்.. பிறகு பார்த்துக்கலாம்... அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ரெட் சிக்னல் கொடுத்த திமுக தலைமை..!
சென்னை: அதிமுக மற்றும் அமமுகவிலிருந்து ஏராளமான நிர்வாகிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி அழைத்து வரும் நிலையில், தற்காலிகமாக இந்த நடவடிக்கையை ஒத்தி வைக்க கோரியுள்ளது திமுக தலைமை.
கஷ்டப்பட்ட காலத்தில் எல்லாம் வராமல் ஆட்சி வந்தவுடன் மாற்றுக்கட்சியினர் வந்து இணைகிறார்களே என்ற திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஆதங்கம் காரணமாக ஆள்பிடிப்பு பணி சிறிது காலம் நிறுத்தப்படவுள்ளது.
இதனிடையே அமைச்சர் செந்தில்பாலாஜியின் நடவடிக்கைகளால் ஒரு சில சீனியர் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் விழிக்கின்றனர்.
தேசிய அரசியலுக்கு மமதா தடாலடி வியூகம்.. தமிழகம் முதல் டெல்லி வரை இன்று வீடியோகான்பரன்ஸில் உரை
சுறுசுறுப்பு
கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில்பாலாஜியை பொறுத்தவரை மிகவும் சுறுசுறுப்பானவர். அரசியலுக்கு மூலதனமே அவரது சுறுசுறுப்பு தான். இது தான் அவரை ஜெயலலிதா அமைச்சரவையிலும், ஸ்டாலின் அமைச்சரவையிலும் அமைச்சராக்கியது. கட்சிப்பணி என்று வந்துவிட்டால் இரவு பகல் பாராமல் உழைக்கக்கூடியவர். பகுதி நேர அரசியல் பகுதி நேர வியாபாரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அரசியலையே தனது சுவாசமாக நினைத்து இயங்கிக் கொண்டிருக்கிறார்.
பரிச்சயம்
இதன் காரணமாக திமுக தலைமையின் குட்புக்கில் இடம்பெற்றிருப்பதோடு கரூரை கடந்த மாநிலம் தழுவிய அளவில் கட்சியினர் மத்தியிலும் பரிச்சயமானார். அதிமுக மற்றும் அமமுகவில் உள்ள நிர்வாகிகளிடம் தொடர்ந்து பேசி அவர்களை திமுகவுக்கு அழைத்து வரும் பணியை மிகச் சரியாக செய்து வருகிறார். இதற்காகவே செந்தில்பாலாஜி மீது ஸ்டாலின் தனி மரியாதை வைத்திருக்கிறார்.
நமக்கு போட்டி
எல்லாம் சரி, சக அமைச்சர்களும், திமுக மாவட்டச் செயலாளர்களும் செந்தில்பாலாஜியின் நடவடிக்கைகளை கண்டு விழி பிதுங்கி நிற்கின்றனரே. மாவட்டத்தில் நமக்கு போட்டியாக புதிதாக ஒரு அதிகார மையம் உருவாவதை எந்த அரசியல் வாதி தான் விரும்புவார்கள். செந்தில்பாலாஜியால் அழைத்துவரப்படுபவர்கள் நம்மை மிஞ்சி விடுவோர்களோ என்ற அச்சம் அவர்களுக்கு. இதனால் தான் குறிப்பிட்ட ஒரு சில மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் செந்தில்பாலாஜியின் முயற்சி பலனளிக்கவில்லை.
ஆதங்கம்
காரணம் அங்குள்ள திமுக நிர்வாகிகளின் எதிர்ப்பு தான். திருச்சி, ராணிப்பேட்டை, திண்டுக்கல், விழுப்புரம், மதுரை உள்ளிட்ட இன்னும் சில மாவட்டங்கள் என நேரு, ஐ.பெரியசாமி, காந்தி, பொன்முடி, மூர்த்தி போன்றோர் நிர்வாகிகளாக இருக்கும் இடங்களில் தனது பழைய சகாக்களை செந்தில்பாலாஜியால் திமுகவுக்கு அழைத்து வர முடியவில்லை. இதனிடையே மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு பதவியா என்ற ஆதங்கமும் திமுக தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கட்சிப்பணி
இதனால் தற்காலிகமாக மாற்றுக்கட்சியினரை திமுகவில் இணைக்கும் பணியை நிறுத்த முடிவெடுத்துள்ளது திமுக தலைமை. தற்போது கொரோனா தடுப்பு பணிகள் ஓரளவு நிறைவடைந்துவிட்டதால் கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் பக்கம் பார்வையை பதிக்கத் தொடங்கியுள்ளது திமுக தலைமை. இதனிடையே சிறிது கால இடைவெளிக்கு பிறகு டிசம்பர் மாதத்தில் மீண்டும் ஒரு ரவுண்ட் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.