10ம் தேதி திமுக பொதுக்குழு.. இடைத்தேர்தலில் வியூகம்.. உழைப்பு என்னவாயிற்று.. விவாதிப்போம்.. ஸ்டாலின்
Recommended Video
சென்னை: இரண்டு தொகுதி இடைத் தேர்தலில் தோற்றது எப்படி என்பது குறித்து விவாதிக்க வரும் 10ம் தேதி திமுக பொதுக்குழு கூட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கள்கிழமை) திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அவர் தனது கடிதத்தில் "2019 மக்களவைத் தேர்தல் களத்திலும், அதனுடன் நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும், திமுக அடைந்த மகத்தானதும் களிப்பூட்டுவதுமான வெற்றிக்குப் பிறகு நடக்கும் பொதுக்குழுக் கூட்டம், வரும் 10 ஆம் தேதி - ஞாயிற்றுக் கிழமையன்று கூடவிருக்கிறது.
அண்மையில் நடைபெற்ற இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை மறந்தது எப்படி?" என நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது. திமுக தலைவர் என்ற பொறுப்பில் இருந்தாலும், முன்னோடும் தொண்டனாகவே என்னைக் கருதிக் கொண்டிருக்கிறேன். எதையும் எவரிடமிருந்தும் மறைக்காமல், உண்மை நிலவரங்களை மறக்காமல், இயக்கத்தின் நலன்- வளர்ச்சி ஒன்றை மட்டுமே இலக்காகக் கொண்டு, திறந்த மனதுடன் கலந்தாலோசிக்கக் கூடுவதுதான் திமுக பொதுக்குழு.
நாட்டுக்கு நாடாளுமன்றம்... கழகத்திற்குப் பொதுக்குழு... மு.க.ஸ்டாலின் கடிதம்
அரசியல் பாடம்
"வெற்றி பெற்றால் வெறிகொண்டு ஆடுவதும் கூடாது; தோல்வி வந்தால் துவண்டு விடுவதும் கூடாது!" என்பதுதான் அண்ணாவும், கருணாநிதியும் நமக்குக் கற்றுத் தந்துள்ள அரசியல் பாடம். அதனை அப்படியே நெஞ்சில் ஏந்திக் கொண்டுதான், பொதுக்குழு கூடுகிறது.
உழைப்பு என்னவாயிற்று
வெற்றி பெற்ற போது நாம் வகுத்த வியூகங்கள் என்ன? களத்தில் வெளிப்படுத்திய உழைப்பு எத்தகையது? இவை அனைத்தும் இரு தொகுதிகளுக்கான களத்தில் என்னவாயிற்று? ஆளுந்தரப்பின் அதிகார துஷ்பிரயோகப் பாய்ச்சலைக் கணிக்க முடியாத சுணக்கம் நம்மிடம் இருந்ததா? ஒருங்கிணைப்பு குறைந்ததா? தோல்விக்கான உண்மையான, முழுமையான காரணங்கள் என்னென்ன? என்பவை அனைத்தும், தொண்டர்களின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தும் வகையில், பொதுக்குழுவில் நேர்மையாக விவாதிக்கப்படும்.
வெற்றி என்பது மாயை
நாம் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம் என்பது உண்மை. அதே நேரத்தில் ஆளுந்தரப்பினர் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது மாயை. அனைத்து நிலைகளிலும் படுதோல்விகளையே கண்டுள்ள தமிழக அரசு, எல்லோரையும் இதிலும் ஏமாற்றிடும் எண்ணத்தோடு, தனது புண்ணுக்கு, தானே புனுகு தடவி மறைக்கும் முயற்சியாக, இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வெற்றியை, சில ஊடகங்களின் உள்நோக்கம் கொண்ட உதவியுடன், கையாள நினைக்கிறது.
தொடை நடுங்கியது
இந்த இடைத்தேர்தலில் மக்களின் ஆதரவு உண்மையாகவே தங்களுக்குக் கிடைத்திருப்பதாக ஆள்வோர் நம்பினால், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு ஏன் தொடை நடுங்கிட வேண்டும்? "ஓட முடியாத குதிரைக்கு சறுக்கியது சாக்கு" என்பது போல, உள்ளாட்சித் தேர்தலை நடத்தத் துணிவில்லாத தமிழக அரசு, நியாயமான இட ஒதுக்கீட்டின்படி தேர்தல் நடத்தக் கோரி திமுக தொடர்ந்த வழக்கைக் காரணம் காட்டி இழுத்தடித்து, நீதிமன்றங்களால் உச்சந்தலையில் குட்டுக்கு மேல் குட்டு வாங்கியுள்ளது.
உள்ளாட்சி நிர்வாகம்
அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி நிர்வாகம் தொடங்கி அனைத்தும் சீரழிந்து கிடக்கிறது. சாலையில் உள்ள குழிகளைச் சரிசெய்ய தகுதியில்லை. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை உயிருடன் மீட்பதில் முறையான திட்டமில்லை. ஒவ்வொருவர் உள்ளத்தையும் பதற வைத்த அந்த நிகழ்வில் மட்டுமல்ல, ஒவ்வொரு இல்லத்திலும் அதிர்வை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், பெரிய மனிதர்களுடன் நெருங்கிய தொடர்புடைய பலர் தப்பிவிட, சிக்கிய இருவரும்கூட குண்டர் சட்டத்திலிருந்து தப்பிக்கின்ற வகையில் அரசு மற்றும் காவல்துறை மெத்தனப் போக்குடன் அலட்சியமாகச் செயல்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.