கருணாநிதி நினைவு தினம்.. 43 ஆயிரம் பேர் பங்கேற்ற பிரம்மாண்ட மராத்தான்.. தொடங்கி வைத்த உதயநிதி!
சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று நடைபெறும் கலைஞர் நினைவு மாரத்தான் போட்டியில் 43 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டுள்ளனர்.
Recommended Video
தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்ப்படுகிறது. அவரது நினைவை போற்றும் வகையில், தமிழக இளைஞர்களிடையே உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் மராத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மராத்தான் போட்டி
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மெய்நிகர் வடிவில் நடத்தப்பட்டு வந்த இந்த மராத்தான் போட்டி, இம்முறை நேரடியாக நடைபெற உள்ளது. இதற்காக பிரத்யேக தளமும் உருவாக்கப்பட்டு, பதிவுகள் செய்யப்பட்டன. இதில் பங்கேற்க பதிவுக் கட்டணமாக 42 கி.மீ. தொலைவு கொண்ட மராத்தான் போட்டிக்கு ரூ.500ம், 21 கி.மீ. தொலைவு கொண்ட மராத்தான் போட்டியில் பங்கேற்க ரூ.300ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் 10 கி.மீ. மராத்தான் மற்றும் 5 கி.மீ. மராத்தான் போட்டிகளும் நடைபெறுகின்றன. பதிவுக் கட்டணங்கள், வசதியற்ற குழந்தைகளின் மருத்துவச் செலவுகளுக்காகச் செலவிடப்பட உள்ளது.

போட்டி எங்கு?
சென்னையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் தொடங்கும் மராத்தான் போட்டி பட்டிணப்பாக்கம், பெசண்ட் நகர் வழியாக மீண்டும் கலைஞர் நினைவிடத்தில் முடியும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் இதுவரை எந்த மராத்தானிலும் இல்லாத அளவுக்கு 43 ஆயிரத்து 320 பேர் பதிவு செய்துள்ளனர். அதில் 10 ஆயிரத்து 985 பேர் பெண்கள் ஆகும்.

பரிசுத் தொகை அறிவிப்பு
அதேபோல் 42 கி.மீ. தொலைவு கொண்ட மராத்தான் போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடிப்பவர்களுக்கு ரூ.1 லட்சமும், இரண்டாம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், மூன்றாம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே பரிசுத்தொகை 21 கி.மீ. தொலைவு மராத்தான் போட்டியில் பங்கேற்பவர்களுக்கும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
மராத்தான் போட்டியின் பதிவுத்தொகையாக ரூ.1 கோடியே 20 லட்சத்து 69 ஆயிரத்து 980 பெறப்பட்டுள்ளது. இந்தத் தொகையை சுகாதாரத்துறை செயலாளரிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்படைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சரோடு, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய 4 நாடுகளின் துணைத் தூதர்கள் கலந்து கொள்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications